வெள்ளி, 8 ஜூன், 2012

விளையாட்டு வீரர்களுக்கு மக்களின் வரிப்பணத்தில் கோடிகளை கொட்டிக் கொடுப்பது நீதியா?

விளையாட்டு என்பது உடலுக்கும், மனதிற்கும் பயனளிக்கும் வகையில் இருக்க வேண்டும். ஆனால் ஒரு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு பொம்மை வடிவிலான சில காய்களை அங்கும் இங்கும் நகர்த்தி விளையாடும் ஒரு விளையாட்டுதான் 'செஸ்' என்பதாகும். இந்த விளையாட்டில் உடலுக்கு எந்த நன்மையுமில்லை. மாறாக உட்கார்ந்து கொண்டே விளையாடுவதால் அது உடலுக்கு சோர்வையே தரும். அதே நேரத்தில் இந்த விளையாட்டில் மூளைக்கு மட்டுமே வேலை என்ற உண்மையும் மறுப்பதற்கில்லை. 

இது ஒருபுறமிருக்க, எப்படி பாரம்பரியமான பல விளையாட்டுகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு இன்று பாலகனின் கையில் கூட 'பேட்'டை பிடிக்க வைத்து சுவீகரித்துக்கொண்ட கிரிக்கெட் போல, செஸ்' விளையாட்டும் இந்தியர்களில் கணிசமானோரால் விரும்பப்படும் விளையாட்டாக உள்ளது. எந்த அளவுக்கென்றால், இந்த விளையாட்டின் உலக சாம்பியனாக ஐந்தாவது முறையாக பட்டம் வெல்லும் அளவுக்கு இதில் இந்தியர்கள் அனுபவமிக்கவர்களாக உள்ளனர். இந்நிலையில், உலக செஸ் சாம்பியன் போட்டியில் ஐந்தாவது முறையாக ஆனந்த் பட்டம் வென்றுள்ளார். அவருக்கு பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் தன் பங்கிற்கு, ஆனந்துக்கு பாராட்டுத் தெரிவித்ததுடன், அவருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ.2 கோடி வழங்கியுள்ளார்.

செஸ் சாம்பியன் பட்டம் வென்ற ஆனந்த், ஒரு இந்தியர் என்ற அடிப்படையில் அவரை பாராட்டுவதும், அவரது வெற்றியில் மகிழ்வதும் ஜெயலலிதாவின் தனிப்பட்ட உரிமையாக இருக்கலாம். ஆனால், அதற்காக மக்களின் வரிப்பணத்தில் இரண்டுகோடியை ஆனந்திற்கு தூக்கிக் கொடுப்பது சரியானதா என்று சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். உண்மையில் ஆனந்த் ஏழையாக இருந்து அவரை உற்சாகப்படுத்துவதற்காக இந்த தொகை வழங்கப் படுமானால் அதில் ஒரு அர்த்தமிருக்கும். ஆனால் ஆனந்தைப் பொருத்தமட்டில் இதுபோன்ற பலகோடிகளை கண்டிருக்கக் கூடும். அவ்வாறிருக்க, கோடிகளில் புரளும் கிரிக்கெட் வீரர்களுக்கு அவ்வப்போது மத்திய அரசு தன் பங்கிற்கு கோடிகளை அள்ளிக் கொடுப்பது போல், ஜெயலலிதாவின் இந்த நடவடிக்கை உள்ளது.

இந்த இரண்டு கோடி வழங்கப்பட்டது ஆனந்தை கவுரவப்படுத்தவே என்று அரசு கூறுமானால், அவரை விட கவுரவப்படுத்த வேண்டிய இந்தியக் குடிமகன்கள் நம் நாட்டில் ஏராளம் பேர் இருக்கிறார்கள். இருக்க வீடின்றி, தெருவோரம் குடியேறி, மழையில் நனைந்து, வெளியில் காய்ந்து, வாடும் நிலையிலும் எவரிடத்திலும் கையேந்தாமல் தனது கரத்தால் உழைக்கும் ஒரு ஏழைத் தொழிலாளி கவுரவப்படுத்தப்பட வேண்டியவன். அவனைப் போன்ற எண்ணற்ற ஏழைகளுக்கு இந்த இரண்டு கோடியில் ஒரு குடிசை அமைத்துத் தந்தால் அவனது குலம் உள்ளவரை முதல்வரை பாராட்டுவானே! 

நன்றாக படிப்பு வந்தும், வீட்டின் வறுமை காரணமாக மேல்படிப்பு படிக்கமுடியாமல் ஏட்டைத் தூக்கி எறிந்து விட்டு ஏதேனும் ஒரு கடையில் சம்பளத்திற்கு பணியாற்றும் எண்ணற்ற கல்விமான்களை தேடிக்கண்டுபிடித்து அவர்களுக்கு இந்த இரண்டு கோடிகளை வழங்கினால் நாட்டிற்கு சேவையாற்றும் எத்தனையோ நல்ல அறிவாளிகளை நாம் பெற்றுக் கொள்ள முடியுமே! 

வறுமையின் காரணத்தால் கொடிய வட்டி என்ற நரகில் விழுந்து, கடன் சுமையால் தற்கொலை செய்துகொள்ளும் ஏழைகள் இருக்கும் நாட்டில், இதுபோன்ற இரண்டுகோடிகளை கடன்பட்டோரை காப்பாற்றுவதற்காக அரசு செலவிடலாமே!

பிள்ளைகளை பெற்றும், அனாதைகளாக ரோட்டில் கையேந்தும் எத்தனையோ முதியோர்களை காப்பாற்றும் வகையில், இந்த இரண்டு கோடிகளை செலவழிக்கலாமே! இந்த நலத்திட்ட்டங்களை ஆனந்தின் பெயரால் கூட அரசு செயல்படுத்தலாமே! இதனால் ஆனந்தையும் கவுரப்படுத்தியதாக ஆகும். தேவையுள்ளவர்களும் பயனடைவார்கள்;. இதைச் செய்யாமல் ஆனந்திற்காக இருந்தாலும் சரி, வேறு எந்த பணக்கார விளையாட்டு வீரர்களுக்காக இருந்தாலும், அவர்களுக்கு வழங்கும் இந்த பரிசுத் தொகைகள் 'கோடியோடு கோடி சேர்ந்தது' என்றுதான் ஆகும் என்பதை முதல்வர் புரிந்து கொள்ளட்டும். அப்படியே கொடுத்தே தீருவேன் என்பது முதல்வரின் கொள்கையாக இருக்குமானால், அவரது கட்சி நிதியிலிருந்து கொடுத்தால் எவரும் கேள்வி கேட்கமாட்டார்கள். அவ்வாறில்லாமல் வயிற்றுப் பசிக்கு துடிக்கும் மக்கள் அரைவயிறு கஞ்சிக்கு அல்லாடிக் கொண்டிருக்கையில், முட்டில் பசியுள்ளவர்களுக்கு முழுக்கோழி பிரியாணி போட நினைப்பது அதுவும், மக்களின் வரிப்பணத்தில் செய்யநினைப்பது சரியா என்பதை முதல்வர் சீர்தூக்கிப் பார்க்கட்டும் என்பதே ஏழைமக்களின் ஏக்கமாக உள்ளது. 

நபியே! அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள்; "எதை, (யாருக்குச்) செலவுசெய்யவேண்டும்" என்று. நீர் கூறும்; "(நன்மையை நாடி) நல்ல பொருள் எதனை நீங்கள் செலவு செய்தாலும், அதை தாய், தந்தையருக்கும், நெருங்கிய உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(ஏழை)களுக்கும், வழிப்போக்கர்களுக்கும் (கொடுங்கள்). மேலும் நீங்கள் நன்மையான எதனைச் செய்தாலும் நிச்சயமாக அல்லாஹ் அதை அறிந்து (தக்க கூலி தருபவனாக) இருக்கிறான்." [அல் குர்'ஆன் 2:215 ]

'காய்ஞ்சு போன பூமியெல்லாம் வற்றாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும்; அந்த நதியே காய்ஞ்சு போயிட்டா....'''!

''காய்ஞ்சு போன பூமியெல்லாம் வற்றாத நதியைப் பார்த்து ஆறுதல் அடையும்; அந்த நதியே காய்ஞ்சு போயிட்டா....'''! இப்படி ஒரு பாடலின் வரி எல்லோருக்கும் நிலைவில் இருக்கும். அதுபோல, சட்டத்தின் மீது நம்பிக்கையுள்ள மக்கள் இறுதியாகவும், உறுதியாகவும் நம்புவது சிபிஐ விசாரணையையும், அது தரும் தீர்ப்பையும் தான். ஒரு சம்பவத்தில் காவல்துறை விசாரிப்பதில் திருப்தியில்லாதவர்கள் கேட்பது, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரனைக்கு மாற்றவேண்டும் என்பதுதான். அந்த அளவுக்கு சிபிஐ மீது மக்களுக்கு ஒரு அதீத நம்பிக்கை மக்களுக்கு உள்ளது.

சிபிஐயும் பல்வேறு பிரச்சினைகளில் நேர்மையான விசாரணை மற்றும் தீர்ப்பின் மூலமும் நீதியை நிலைநாட்டியுள்ளது என்பதும் அனைவரின் ஏற்றுக்கொண்ட உண்மையாகும். அத்தகைய சிபிஐ நீதிமன்றத்தின் நீதிபதி ஒருவரே லஞ்சம் வாங்கிக் கொண்டு நீதியை சாகடித்துள்ள செய்தி ஊடகங்களில் வெளியாகி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.

கர்நாடகாவில் ரெட்டி சகோதரர்கள் என்றழைக்கப்படும் கருணாகர ரெட்டி, ஜனார்த்தன ரெட்டி, சோமசேகர ரெட்டி மூவரும் சட்ட விரோத சுரங்கத் தொழில் மூலம் பல ஆயிரம் கோடி ரூபாய் சம்பாதித்தது கடந்த ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது. எடியூரப்பா மந்திரி சபையில் அமைச்சர்களாக இருந்த கருணாகர ரெட்டியும் ஜனார்த்தன ரெட்டியும் சுரங்கத் தொழில் முறைகேடு காரணமாக பதவி இழந்தனர். பிறகு அவர்களை சிபிஐ கைது செய்து ஜெயிலில் அடைத்தது. 

அந்த கனிம சுரங்க முறைகேடு தொடர்பாக ஐதராபாத்தில் உள்ள சிபிஐ கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. அந்த சிபிஐ கோர்ட்டின் நீதிபதியாக இருப்பவர் பட்டாபிராமராவ்.
ரெட்டி சகோதரர்களில் ஜனார்த்தன ரெட்டி மீது மட்டுமே அந்த கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் இவருக்கு ஜாமீன் வழங்க. அதற்கு லஞ்சமாக 10 கோடி பேரம் பேசி, மூன்று கோடி முன் பணம் பெற்றுக்கொண்டு, சிபிஐ நீதிபதி பட்டாபிராமராவ் ஜாமீன் வழங்கியுள்ளார். 

ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் கொடுக்கப்பட்டதற்கு சிபிஐ கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆந்திர ஐகோர்ட்டில் ஜனார்த்தன ரெட்டி விடுதலையை எதிர்த்து அப்பீல் செய்யப்பட்டது. 

அந்த அப்பீல் மனுவை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதிகள், சிபிஐ கோர்ட்டில் ஜனார்த்தன ரெட்டிக்கு ஜாமீன் வழங்கப்பட்டதில் முறைகேடுகள் நடந்து இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து கடந்த 23-ந்தேதி ஜனார்த்தன ரெட்டியின் விடுதலை உத்தரவை ரத்து செய்தனர். 

லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை நடத்தவும் உத்தரவிட்டனர். இதற்கிடையே ஆந்திரா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி மதன் தலைமையில் நீதிபதிகள் குழு ஒன்று கடந்த வியாழக்கிழமை கூடி தீவிர ஆலோசனை நடத்தியது. அதன் பிறகு சிபிஐ கோர்ட்டு நீதிபதி பட்டாபிராமராவை சஸ்பெண்டு செய்து ஐகோர்ட்டு நீதிபதிகள் உத்தர விட்டனர்.

இது தொடர்பான விசாரணை முடியும் வரை நீதிபதி பட்டாபிராமராவ் ஐதராபாத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது என்றும் உத்தரவிட்டனர். இதற்கிடையே நீதிபதி பட்டாபிராமராவின் நடவடிக்கைகளில் ஏற்கனவே சந்தேகம் அடைந்திருந்த சிபிஐ அதிகாரிகள், அவருக்கு தெரியாமலே அவரது செயல்பாடுகளை கண்காணித்தனர். அவரது போன், அவரது மகன் போன் அழைப்புகள் ஓட்டு கேட்கப்பட்டன.

பிறகு நீதிபதி பட்டாபிராமராவ், அவரது மகனிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த 4 நாட்களாக தீவிர விசாரணை நடத்தினார்கள். அந்த விசாரணையில், கர்நாடக சட்ட மந்திரி பிரதாப்ரெட்டி, 2 எம்.எல்.ஏ.க்கள், ஓய்வு பெற்ற ஒரு நீதிபதி மற்றும் சில ரவுடிகள் ஆகியோர் நீதிபதிக்கு பணம் கொடுத்ததில் சம்பந்தப்பட்டிருப்பது தெரிய வந்தது. இதன் தொடர்ச்சியாக சிபிஐ விசாரித்து ஏராளமான ஆதாரங்களை திரட்டி உள்ளது.

நாட்டையே உலுக்கிய சுரங்கத்தொழில் முறைகேட்டில் கைதான ஒருவரை ஜாமீனில் விடுதலை செய்ய சிபிஐ கோர்ட்டு நீதிபதியே ரூ.10 கோடி பேரம் பேசி பணம் பெற்றது நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது. சிபிஐ கோர்ட்டு நீதிபதி ஒருவர் லஞ்சம் வாங்கியதற்காக கைதாவது இதுவே முதல் முறையாகும். லஞ்ச லாவண்யமற்ற தூய்மையான கரத்துக்கு சொந்தக்காரர்கள் என மார்தட்டிக் கொள்ளும் பாஜக ஆளும் கர்நாடகாவில், அக்கட்சியைச் சேர்ந்தவர்களே தங்களின் விடுதலைக்காக நீதிபதிக்கு லஞ்சம் கொடுத்து, நீதியை சாகடிக்க முற்பட்டுள்ளனர். இத்தகையோர் இந்தியாவை ஆண்டால், என்னாகும் என்பதை மக்கள் உணர்ந்துகொண்டு மதவாத, ஊழல்வாத பாஜகவை வீட்டிற்கு அனுப்ப முயற்சிக்கவேண்டும்.



இரட்டைக் குவளையை இல்லாமல் ஆக்க, இஸ்லாமே தீர்வு.

ந்திய நாடு சுதந்திரம் அடைத்து அறுபத்தைந்து ஆண்டுகளை எட்டும் நிலையில், அன்று சட்டமேதை அம்பேத்கர் அவர்கள் தனது வாழ்நாளில் அனுபவித்த தீண்டாமை இன்றும் தொடர்கதையாக உள்ளது. "ஜாதிகள் இல்லையடி-பாப்பா குலம் தாழ்த்தி உயர்த்தி சொல்லல் பாவம்!" என்ற பாரதியாரின் உன்னதமான வார்த்தைக்கு உயிரூட்ட இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ தெரியவில்லை.

இது ஒருபுறமிருக்க,கடந்த ஏப்ரல் மாதம் அம்பேத்கரின் பிறந்த தின நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் அவர்கள் பேசும்போது, 

''தான் படித்த வகுப்பறையில் சக மாணவர்களுக்கு இணையாக குடிநீர் அருந்தக்கூட இயலாத அளவுக்கு தீண்டாமை கொடுமையால் பாதிக்கப்பட்டவர் அம்பேத்கர். ஜாதியின் அடிப்படையில் மக்களைப் பாகுபடுத்தக் கூடாது என்ற கருத்தை சமூகம் சகித்துக் கொள்ளாத காலம் அது. இந்திய வரலாற்றில் அவையெல்லாம் கறுப்பு நாள்கள். அந்த சூழ்நிலை இன்று எவ்வளவோ மாறிவிட்டது. அந்த மாற்றத்தை ஏற்படுத்த தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களை ஒன்று திரட்டி அம்பேத்கர் பல போராட்டங்களை நடத்தினார்.

தமிழகத்தில் பெரியாரின் அயராத உழைப்பின் காரணமாகத்தான் இன்று ஒரு சில குக்கிராமங்களைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் சாதி பாகுபாடு துடைத்தெறியப்பட்டது. எனினும், இங்கு இன்னும் சில கிராமங்களில் இரட்டை டம்ளர் முறை தொடர்வது வேதனை அளிக்கிறது. இந்த பாகுபாடுகள் முற்றாகக் களையப்பட வேண்டும் என்றார் இக்பால்.

அம்பேத்கார், பெரியார் போன்ற தலைவர்கள் பாடுபட்டும் தமிழகத்தில் பிறப்பின் அடிப்படையில் பார்க்கப்படும் சாதிய பாகுபாடு களையப்பட்டு விட்டதா என்றால் இல்லை. இன்றும் மதுரை மாவட்டத்தில், 149 கிராமங்களின் டீக்கடைகளில் இரட்டைக் குவளைகள் நடைமுறையில் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வை மேற்கொண்ட, மதுரை, "எவிடன்ஸ்' நிர்வாக இயக்குனர் கதிர் கூறியதாவது :ஒரு மாதமாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வுக்கு எடுக்கப்பட்ட, 149 கிராமங்களில், 463 டீக்கடைகளில், இரட்டை டம்ளர் முறை, தற்போதும் உள்ளது.இதில், 131 கிராமங்களில், இரு சமூகத்தினருக்கு, தனித் தனி டம்ளர் கொடுப்பதும், 12 கிராமங்களில், ஒரே டம்ளர்களை, இரு சமூகத்தினருக்கு தனித்தனியாக வைப்பதும் தொடர்கிறது. ஒன்பது டீக்கடைகளில், குறிப்பிட்ட சமூகத்தினர், டம்ளர்களை சுத்தப்படுத்தி வைக்கின்றனர். 67 கடைகளில், தனித் தனி இருக்கைகளும் உண்டு.இரட்டை டம்ளர் முறைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, 2011 ஏப்ரலில், சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. சில ஆண்டுகளுக்கு முன், இரட்டை டம்ளர் முறையை ஒழிக்க, "சமத்துவ தேனீர் விருந்து' திட்டம், அரசால் கொண்டு வரப்பட்டது. இத்திட்டம், கிடப்பில் உள்ளது.டீக்கடை உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், இரட்டை டம்ளர் முறையை கண்காணிக்க, தாசில்தார் தலைமையில் குழு அமைக்க வேண்டும். டீக்கடைகளில் மட்டுமல்ல; ஓட்டல், சலூன், ரேஷன் கடை, பல்பொருள் அங்காடியில் கடைபிடிக்கப்படும் தீண்டாமைக்கு எதிராக, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்டங்களில் நடக்கும் வன்கொடுமைக்கு எதிரான விழிப்புணர்வு கூட்டத்தில், இரட்டை டம்ளர் முறையை ஒழிப்பது குறித்து விவாதிக்க வேண்டும்'' இவ்வாறு கதிர் கூறியுள்ளார்.

என்னதான் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தினர் அந்தஸ்தில் உயர்ந்தாலும் அவர்கள் மீதான சாதிய முத்திரை மட்டும் அகல்வது போல் தெரியவில்லை. இதனால்தான் சமூக நீதிக்காக சம உரிமைக்காக போராடிய பெரியார் அவர்களே ஒரு கட்டத்தில், 'இன இழிவு நீங்க இஸ்லாமே நன் மருந்து'' என்ற கருத்தை முன் வைத்தார். ஆம். இஸ்லாம் ஒன்றுதான் ஒருவனது பழைய முகவரியை மாற்றி முஸ்லிம் என்ற ஒரே முகவரியைத் தர வல்லது என்பதை பெரியார் உணர்ந்திருந்தார். ஒரு தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த ஒருவர் இஸ்லாத்தை தழுவிய அடுத்த நொடியே பரம்பரை முஸ்லிமின் சகோதரனாகி விடுகின்றான். இவன் நேற்றுவரை தாழ்த்தப்பட்டவனாக இருந்தவனாயிற்றே; இவனுடன் நமக்கென்ன உறவு என்று எந்த முஸ்லிம்களும் நினைப்பதில்லை. மாறாக அவனோடு ஒரே தட்டில் உண்டு உறவாட இன் முகத்துடன் முன்வருவார்கள். இந்த பக்குவத்தை இஸ்லாம் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் வழங்கியுள்ளது. ஏனென்றால் இஸ்லாம் பிறப்பிற்கு முக்கியத்துவம் கொடுக்கும் மார்க்கமல்ல. மாறாக மனிதனின் வாழ்வின் அடிப்படையை வைத்து, அவன் இறைவனுக்கு அஞ்சும் தன்மையை வைத்தே அவனை சிறந்தவன் என்று சொல்லும் மார்க்கம். 

எனவே பட்டியலின மக்கள் கவனிக்க வேண்டியது. அம்பேத்கரே இந்துமத தீண்டமையினால் வெறுத்து, பல்லாயிரம் மக்கள் சகிதமாக புத்தமதம் தழுவினார். ஆனாலும் அம்பேத்கார் எதிர்பார்த்த அந்த சுயகவுரத்தை புத்தமதம் வழங்கிவிடவில்லை. அதனால்தான் இன்றும் அந்த இழிவு நீங்கவில்லை. அதே நேரத்தில் பெரியாரின் அறிவுரைப்படி இஸ்லாத்தில் இணைந்த பட்டியின மக்கள் இன்று தங்களின் பழைய பாரம்பரியம் என்ன என்று கூட தெரியாத அளவுக்கு அவர்கள் இழிவிலிருந்து நீங்கி, கவுரவத்துடன் முஸ்லிம் என்ற அடையாளத்துடன் வாழ்கிறார்கள். எனவே எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தீராத இந்த இழிவை ஒரு நொடியில் நீக்கும் அருமருந்தான இஸ்லாத்தை நோக்கி வாருங்கள். இன்முகத்தோடு வரவேற்கிறோம்.


திங்கள், 4 ஜூன், 2012

கல்வியும்-இஸ்லாமும்!

بِسْمِ اللهِ الرَّحْمنِ الرَّحِيمِِ


இந்த ஆண்டுக்கான கல்வியாண்டு தொடங்கியுள்ளநிலையில், நம்முடைய மாணவமணிகள் கல்விச்சாலையை நோக்கி அணியணியாய் செல்லும் அழகுகாட்சிகள். வருங்கால இஸ்லாத்தையும்- வருங்கால இந்தியாவையும் தீர்மானிக்கும் சிற்பிகளான இந்த மாணவமணிகளை அழகுற வார்த்தெடுக்கும் பொறுப்பு பெற்றோர்களுக்கு அதிலும் குறிப்பாக இஸ்லாமிய பெற்றோர்களுக்கு உண்டு. ஏனெனில், வேறு எந்த சித்தாந்தங்களும் சொல்லாத அளவுக்கு கல்வியை வலியுறுத்துவதோடு, கற்பவர்களுக்கு சிறப்பையும், நன்மைகளையும் வழங்குவதாக இஸ்லாம் பறை சாற்றுகிறது.


கல்வி கற்ப்பித்தவன் இறைவனே!


மனித குலத்திற்கு வழிகாட்டியாக அனுப்பபட்ட மாநபி[ஸல்] அவர்களுக்கு அல்லாஹ் இறக்கிய முதல் வசனமே 'படிப்பீராக' என்பதாகும்.


(யாவற்றையும்) படைத்த உம்முடைய இறைவனின் திருநாமத்தைக் கொண்டு ஓதுவீராக. (96:1)


'அலக்' என்ற நிலையிலிருந்து மனிதனை படைத்தான். (96:2)


ஓதுவீராக: உம் இறைவன் மாபெரும் கொடையாளி. (96:3)
الَّذِي عَلَّمَ بِالْقَلَمِ
அவனே எழுது கோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். (96:4)


மனிதனுக்கு அவன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான். (96:5)


மற்றொரு வசனத்தில்,ஆதிமனிதரும், நபியும், அனைத்து மாந்தர்களின் மூல தந்தையுமான ஆதம்[ அலை] அவர்களுக்கு அல்லாஹ் கல்வி கற்றுத்தந்ததை குறிப்பிடுகின்றான்.


"ஆதமே! அப் பொருட்களின் பெயர்களை அவர்களுக்கு விவரிப்பீராக!" என்று (இறைவன்) சொன்னான்; அவர் அப்பெயர்களை அவர்களுக்கு விவரித்தபோது "நிச்சயமாக நான் வானங்களிலும், பூமியிலும் மறைந்திருப்பவற்றை அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், நீங்கள் மறைத்துக் கொண்டிருப்பதையும் நான் அறிவேன் என்றும் உங்களிடம் நான் சொல்லவில்லையா?" என்று (இறைவன்) கூறினான். (2:33)


அது மட்டுமன்றி, கல்வியில் இருவகை உண்டு. ஒன்று படிப்பதன் மூலம் அறிவது. மற்றொன்று சம்மந்தப்பட்ட இடங்களை பார்வையிடுவதன் மூலம் அறிவது. அதனால்தான் பல்வேறு கல்வி நிலையங்களில் மாணவர்களை பயிற்றுவிக்கும் வகையில் பல்வேறு இடங்களுக்கு அழைத்து சென்று விளக்குவதை நாம் பார்க்கலாம். இப்படிப்பட்ட படிப்பினை பெறக்கூடிய பயணத்தை மேற்கொள்ளுமாறும் அல்லாஹ் தன் அருள்மறையில் பல இடங்களில் சொல்லிக்காட்டுகின்றான்;


உங்களுக்கு முன் பல வழி முறைகள் சென்றுவிட்டன. ஆகவே, நீங்கள் பூமியில் சுற்றி வந்து (இறை வசனங்களைப்) பொய்யாக்கியோரின் முடிவு என்ன ஆயிற்று என்பதைப் பாருங்கள். (3:137)


கற்றவர்களே சிறந்தவர்கள்;


எவர் மறுமையை அஞ்சி தன் இறைவனுடைய ரஹ்மத்தை ஆதரவு வைத்து இராக்காலங்களில் ஸுஜூது செய்தவராகவும், நிலையில் நின்றவராகவும் வணங்குகிறாரோ அவர் (நிராகரிப்பவரைப் போல்) ஆவாரா? (நபியே!) நீர் கூறும்; "அறிந்தோரும், அறியாதோரும் சமமாவார்களா? நிச்சயமாக (இக் குர்ஆனைக் கொண்டு) நல்லுபதேசம் பெறுவோர் அறிவுடையவர்கள் தாம்." (39:9)


இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்கள்; 
உமர் இப்னு கத்தாப்(ரலி) எப்போதும் தன்னைத் தம் அருகிலேயே வைத்திருப்பார்கள். எனவே, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) உமர்(ரலி) அவர்களிடம், 'எங்களுக்கு அவரைப் போன்ற மகன்கள் (பலர்) இருக்கிறார்களே (அவர்களையெல்லாம் நீங்கள் உங்கள் அருகில் வைத்துக் கொள்வதில்லையே ஏன்?)" என்று கேட்டார்கள். அதற்கு உமர்(ரலி) அவை, 'அது உங்களுக்குத் தெரிகிற (அவர் ஒரு கல்வியாளர் என்ற) காரணத்தால் தான்" என்று பதிலளித்தார்கள்.[புஹாரி]


கற்றவர்க்கு கிடைக்கும் பரிசு;
உங்களில் ஈமான் கொண்டவர்களுக்கும், கல்வி ஞானம் அளிக்கப்பட்டவர்களுக்கும் அல்லாஹ் பதவிகளை உயர்த்துவான் - அல்லாஹ்வோ நீங்கள் செய்பவற்றை நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். (58:11)


இத்தகைய சிறப்புகளை பெற்றுத்தரும் கல்வி எது என்பதை பார்ப்போம்.


கல்வியில் மூன்று வகை உண்டு;
*மார்க்க கல்வி
*மார்க்கம் அனுமதித்த உலக கல்வி
*மார்க்கம் தடை செய்த உதவாக்கல்வி


மார்க்க கல்வியை பொறுத்தவரையில் அதுஇம்மைக்கும்-மறுமைக்கும் பயனளிப்பவையாகும். ஆனால் இஸ்லாமிய சமூகம் மார்க்க கல்விக்கு இரண்டாம் இடத்தை வழங்கிவிட்டு, உலக கல்விக்கு முதலிடத்தை வழங்கி முக்கியத்துவம் அளிக்கிறது. காரணம் மார்க்க கல்வியை கற்பதால் பொருளாதார ரீதியில் என்ன பலன் என்ற கணக்கு போடுவதுதான். தன்னுடைய பிள்ளையை எல்.கே.ஜி.யில் சேர்க்க இரவு பகலாக முயற்ச்சிக்கும் பெற்றோர், மதரசாவில் சேர்ப்பதற்கு பெரிய அளவில் 'ரிஸ்க்' எடுப்பதில்லை. 

சில ஊர்களில் காலையில் பள்ளிவாசல் இமாம் ஓதிக்கொடுக்கும் மதரசாவிற்கு செல்லும் பிள்ளைகளை பார்த்தால் தூங்கிய முகத்தோடு, கிழிந்த அல்-குர்ஆணை எடுத்துக்கொண்டு வேண்டா வெறுப்பாக செல்வதை பார்க்கலாம். அதே நேரத்தில் உலக கல்வி கற்க பள்ளிக்கு செல்லும்போது குளித்துமுழுகி, பவுடரடித்து, சீருடை அணிந்து அழகாக செல்வதை காணலாம். இதற்கு காரணம் அந்த பிள்ளைகளல்ல; பெற்றவர்கள்தான். உலக கல்விக்கு தரும் இந்த முக்கியத்துவத்தை மார்க்க கல்விக்கும் தரவேண்டும். உலக கல்வியின் பலன் இந்த உலகத்தோடு முற்றுப்பெற்று விடும். மார்க்க கல்வி ஒன்றே மறுமைவரை துணையிருக்கும் என்பதையும், என்னதான் உலக கல்வியில் உச்சத்திற்கு சென்றாலும் மார்க்ககல்வி கற்றவர்களால்தான் ஒழுக்கமாகவும், நேர்மையாகவும் தங்களின் வாழ்வை அமைத்துக்கொள்ள முடியும் என்பதையும் பெற்றோர்களும் உணரவேண்டும். பிள்ளைகளும் உணரவேண்டும்.
அன்று அருமை சகாபாக்கள்மார்க்கத்தை கற்பதில் எந்த அளவுக்கு ஆர்வமாய் இருந்துள்ளார்கள் என்பதற்கு ஒரு சான்று;

உமர்[ரலி] அறிவித்தார்கள்;
'நானும் அன்சாரித் தோழர்களில் ஒருவரான என்னுடைய அண்டை வீட்டுக்காரரும் உமய்யா இப்னு ஜைது என்பவரின் சந்ததிகள் வசித்து வந்த இடத்தில் வாழ்ந்து வந்தோம். அது மதீனாவின் உயரமான இடங்களில் ஒன்றாகும். நபி(ஸல்) அவர்களின் அவைக்கு நாங்கள் முறை வைத்துச் சென்று வந்தோம். ஒரு நாள் அவர் செல்வார்; ஒரு நாள் நான் செல்வேன். நான் சென்று நபி(ஸல்) அவர்களுக்கு இறைவனிடமிருந்து அறிவிக்கப்பட்ட செய்தி மற்றும் ஏனைய செய்திகள் முழுவதையும் அவருக்காகக் கொண்டு வந்து (அவரிடம் அறிவித்து) விடுவேன். அது போன்று அவர் சென்றுவரும் போதும் அவ்வாறே செய்வார்.[புஹாரி]

பெண்களின் ஆர்வம்;

(நாங்கள் உங்களை அணுகி மார்க்க விளக்கங்களை கேட்க முடியாதவாறு) தங்களிடம் (எப்போதும்) ஆண்களே எங்களை மிகைத்து நிற்கிறார். எனவே, தாங்களாகவே எங்களுக்கென்று ஒரு நாளை ஏற்பாடு செய்யுங்கள்' என்று பெண்கள் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டுக் கொண்டார்கள். அவர்களும் அப்பெண்களுக்கென ஒரு நாளை வாக்களித்து, அந்நாளில் அவர்களைச் சந்தித்து அவர்களுக்கு அறிவுரை பகர்ந்தார்கள்.[புஹாரி]

மேற்கண்ட இரு நபி மொழிகளும் மார்க்கத்தை அறிந்து கொள்வதில் சத்திய சகாபாக்களுக்கு இருந்த ஆர்வத்தை படம்பிடித்து காட்டுகிறது. அதுபோல் நாமும் மார்க்க கல்விக்கு முக்கியத்துவம் தரவேண்டும்.

உலக கல்வி;

உலக கல்வியை பொறுத்தவரையில் மார்க்கத்திற்கு உட்பட்டு அதை கற்பதில் எவ்வித தடையும் இல்லை. ஆனால் கல்வியை தூண்டக்கூடிய மார்க்கத்திற்கு சொந்தக்காரர்களாகிய நம் சமுதாயம், ஏனைய சமுதாயங்களோடு ஒப்பிடுகையில் அதல பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கிறது. இதற்கு காரணம் அறியாமை ஒருபுறம். வறுமை மறுபுறம். நம் பிள்ளை என்னத்த படிச்சாலும் நமக்கு என்ன அரசாங்க உத்தியோகமா கெடைக்க போகுது என்ற விரக்தி நம் மக்கள் மத்தியில் இருப்பதை மறுக்க முடியாது. ஆனால் அரசாங்கம் வேலை வாய்ப்பு தந்தால், அதை ஏற்கும் தகுதியுடைய கல்விமான்களாக நாம் தயாராக வேண்டும் எனபதை ஏனோ மறந்து விட்டோம். எதோ கையெழுத்து போடும் அளவுக்கு படிப்பது; மீசை வளர்ந்தவுடன் பாஸ்போர்ட் எடுப்பது; வளமான இளமையை வளைகுடாவில் தொலைப்பது; இப்படியே நம் சமுதாய மக்களின் வாழ்க்கை முடிந்துவிட்டது. இந்த நிலை மாறவேண்டும். இட ஒதுக்கீடு கொடு என்று கேட்பதற்கு முன்னால், அந்த இடத்திற்கு தகுதியானவர்களாக நாம் மாறவேண்டும்.

நம் சமுதாயம் கல்வியில் பின் தங்கியிருப்பதற்கு வறுமை காரணம் என்று ஆரம்பத்தில் குறிப்பிட்டோம். அரசாங்கம் இலவசமாக புத்தகம் வழங்கினாலும், தன் பிள்ளைகளுக்கு நோட்டு புத்தகம் உள்ளிட்ட மற்ற பொருட்கள் வாங்கி கொடுப்பதற்கு இயலாத எத்துணையோ பெற்றோர்கள் இருக்கிறார்கள். மேலும் மேல்படிப்பிற்கு செலவு செய்ய முடியாத பெற்றோர்களும் இருக்கிறார்கள். இப்படிப்பட்டவர்கள் தங்கள் பிள்ளைகளின் படிப்பை இடை நிறுத்தம் செய்துவிடாமல் கண்காணித்து அவர்களின் தேவைகளை நிறைவேற்ற சமுதாய அமைப்புகள் முன்வரவேண்டும். கோடிகளை கொட்டி மாநாடு நடத்தும் பணத்தில் குறைந்த பட்சம் நூறு பட்டதாரிகளை உருவாக்கிவிடலாம். உப்பு சப்பில்லாத விசயத்திற்கு கொடி பிடித்து ஆர்ப்பாட்டம் செய்யும் பணத்தில் பல நூறு பட்டதாரிகளை உருவாக்கிவிடலாம். இதையெல்லாம், சமுதாயத்தில் உள்ளவர்களிடம் வசூல் செய்து அமைப்பு நடத்துபவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும். மேலும், சிறுபான்மையினர் கல்வி நிலையங்கள் வறிய நிலையில் உள்ள முஸ்லீம் மாணவமணிகளுக்கு இலவச/குறைந்த கட்டணத்தில் கல்வி வழங்க முன்வரவேண்டும்.

உதவா கல்வி;
சில வசதி படைத்த முஸ்லிம்கள் தங்கள் பிள்ளைகளை டான்ஸ் கிளாஸ், மியூசிக் கிளாஸ் இதுபோன்ற மார்க்கம் தடுத்த கல்விகளுக்கு பயிற்றுவிக்கிறார்கள் . நிச்சயமாக இதிலிருந்து விலகிக்கொள்ள வேண்டும். இந்த கல்வி நன்மைக்கு பதிலாக தீமையையே பெற்றுத்தரும் எனபதை விளங்கவேண்டும்.

கல்விக்காக பிராத்தியுங்கள்;

ஆகவே, உண்மை அரசனாகிய அல்லாஹ்வே மிக உயர்ந்தவன்; இன்னும் (நபியே!) உமக்கு (குர்ஆனின்) வஹீ அறிவிக்கப்பட்டு அது முடிவதற்கு முன்னதாகவே குர்ஆனை ஓத நீர் அவசரப்படாதீர்; "இறைவா! கல்வி ஞானத்தை எனக்கு அதிகப்படுத்துவாயாக!" என்றும் நீர் பிரார்த்தனை செய்வீராக! (20:114)

எல்லாம் வல்ல அல்லாஹ் நம் சமுதாயத்தைச் மார்க்க கல்வியிலும்-உலக கல்வியிலும் தேர்ந்த சமுதாயமாக ஆக்கி அருள்வானாக!

சுற்றுச்சூழலும்-இஸ்லாமும்!

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்.

ன்று [5 .6 .2012 ]உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. சுற்றுச்சூழல் என்பது நீர்-நிலம்-ஆகாயம் ஆகியவற்றை தூய்மையானதாக, பாதுகாப்பானதாக ஆக்கிக்கொள்வதாகும். பொதுவாக, நமது முன்னோர்கள் முதிர்ந்த வயதுவரை ஆரோக்கியமாக வாழ்ந்தார்கள் எனில், அவர்கள் உண்ட உணவு கலப்படமற்றதாக இருந்து. மேலும், அவர்கள் சுற்றுச்சூழல் நிறைந்த வாழ்க்கை வாழ்ந்தார்கள். நாம் வரலாறுகளை படிப்போமானால் அதில், அசோகர் எனும் மன்னர் சாலைகளின் இரு புறங்களிலும் மரங்களை நட்டார் என்ற செய்தியை காணலாம். அசோகர் எதற்காக மரங்களை நட்டினார்..? மரங்களின் மூலம்தான் உண்மையான நிழலும், தூய்மையான காற்றும், மழையையும் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் இன்று என்ன நிலை..? மரங்களின் நிலையோ பரிதாபம்! அரசியல் பிரச்சினை என்றாலும் மரம் வெட்டுகிறார்கள். ஊர் பிரச்சினை என்றாலும் மரத்தை வெட்டி நடுரோட்டில் போட்டு போக்குவரத்தை தடுக்கிறார்கள். அரசியல் கட்சிகளின் மாநாடுகளின் போது ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்படுகிறது. தங்களின் சொந்த ஆதாயத்திற்காக கானகங்களை அழிக்கும் வீரப்பன்களும் இருக்கிறார்கள். இதுபோக எப்போதும் பசுமையாக இருக்கும் விவசாய நிலங்கள் வீட்டுமனைகளாக மாறி விட்ட நிலை. மேலும், சுற்றுச்சூழலை மேம்படுத்தும், ஆறுகள், ஏரிகள், குளங்கள் ஆகியவைகள் ஆக்கிரமிப்பாளர்களின் கரத்தில் மாட்டி, 'சிறுத்த இடையாள்' போல் சிறுத்து காட்சியளிக்கிறது.

மேலும், காற்றை மாசுபடுத்துவதில் முக்கிய பங்காற்றுவது பெருகிவரும் வாகனங்களின் எண்ணிக்கையாகும். ஆயிரம் ரூபாயோடு சென்றால் அடுத்தநாள் கார் சாவி கைக்கு வரும் வகையில் அதிகரித்துவரும் மோட்டார் 'லோன்' களால் அவசியமானவர்கள் மட்டுமன்றி, அந்தஸ்த்துக்காகவும் நான்கு-இரண்டு சக்கர வாகனங்கள் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பால், போக்குவரத்து நெரிசல், பூமி சூடாகுதல், வாகனங்கள் விடும் புகையால் காற்று மாசுபடுதல் ஆகியவை அன்றாட நிகழ்வுகளாகிவிட்டது.

மேலும், காற்றை மாசுபடுத்தும் அடுத்தகாரணி புகையை வெளிப்படுத்தும் வேலையை செய்யும் பட்டாசு கொளுத்துதல், போகி கொளுத்துதல் போன்றவைகளாகும். நாமறிந்தவரை, ஒருகாலத்தில் பட்டாசு என்பது பண்டிகை அதிலும் குறிப்பாக தீபாவளி பண்டிகையின்போது மட்டும் கொளுத்தப்பட்ட நிலை மாறி, இன்று காத்து குத்து தொடங்கி கருமாதிவரை; வேட்புமனு தாக்கல் முதல் பதவிக்காலம் முடியும் வரை; தலைவரின் பிறந்த நாள் தொடங்கி, தலைவர் தன் சொந்த கட்சி ஆபீசுக்கு வரும் நாள், பொதுக்கூட்டத்தில் வீர[?] உரையாற்றும் நாள் என்று ஏறக்குறைய எல்லா நாட்களிலும் ஏதேனும் ஒரு மூலையில் வெடி சத்தம் கேட்காத நாள் இல்லை எனலாம். தங்களின் சந்தோசத்திற்காக பட்டாசு கொளுத்துபவர்கள், தங்களின் இந்த செயலால் காற்று மாசுபடுவதை பற்றியோ, சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதை பற்றியோ கவனத்தில் கொள்வதில்லை.

அடுத்து சுற்றுச்சூழலை கெடுப்பது ஆலைகளின் கழிவு நீரை ஆறுகளில், ஏரிகளில் கலக்க செய்யும் ஆலைகளை பெரும்பாலும் அதிகாரிகள் கண்டுகொள்ளாதது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆலைகளின் கழிவு நீர் ஆற்றில் கலப்பதால், நீர் மாசுபடுவதால் அந்த நீரில் வாழும் மீன்கள் செத்து மடிவதும், அந்த பகுதி மக்களுக்கு பல்வேறு விதமான நோய்கள் ஏற்ப்பட்டதையும் பற்றி பல்வேறு காலகட்டங்களில் பத்திரிக்கைகளில் செய்திகளை காணமுடியும். இந்த நிலை மாற , ஆலைகள் விஷயத்தில் கடுமையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொண்டு நீர் நிலைகள் பாதிக்காதவாறு கவனம் செலுத்தவேண்டும்.

அடுத்து சுற்றுச்சூழலை கெடுப்பது மக்கள் தங்களின் கழிவு பொருட்களை தெருவில் போடுவதாகும். நமது வீட்டை நாம் எவ்வாறு சுத்தமாக வைத்திருக்க எண்ணுகிறோமோ, அதுபோல் நாம் வசிக்கும் தெருக்களும் சுத்தமாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் வருமானால் தெருக்கள் தூய்மையாக காட்சியளிக்கும். அரபுநாடுகள் தூய்மையாக இருப்பதற்கு காரணம், தூய்மை ஈமானில் ஒரு பகுதி என்று இஸ்லாம் வழிகாட்டிய காரணத்தால், தங்கள் வீட்டு கழிவுகளை தெருக்களில் வீசி எரியாமல், பாலிதீன் கவர்களில் கட்டி அதை குப்பை தொட்டியில் போடுகிறார்கள். மேலும் அரசு, ஒவ்வொரு வீட்டு அருகாமையிலும் குப்பை வாளிகளை வைத்து அதில் சேரும் குப்பைகளை மாநகராட்சி வாகனங்கள் மூலம் தினம் தோறும் அகற்றுவதால், நகரம் தூய்மையாக இருப்பதோடு சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்படுகிறது. ஆனால், நம் நாட்டிலோ குப்பைகளை தினந்தோறும் அப்புறப்படுத்துவதில்லை. அப்படியே அப்புறப்படுத்தினாலும் ரோட்டில் பாதியை சிதறிவிட்டு செல்லும் வாகனங்களை பார்க்கிறோம். இந்த நிலை மாறவேண்டும்.

இவைகளுக்கெல்லாம் இஸ்லாம் அற்புதமான வழியை காட்டி அவ்வாறு செய்வதற்கு நன்மையும் தருவதாக கூறுகின்றது. நாம் ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று, தூய்மையை இறை நம்பிக்கையின் ஒரு பகுதியாக்கி தூய்மையை ஊக்குவிக்கிறது. அதோடு ஒரு முஸ்லிம் சுற்றுச்சூழல் விஷயத்தில் எப்படி நடக்க வேண்டும் என்று இஸ்லாம் கூறுவதை பாருங்கள்;

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" முஸ்லிம் ஒருவர் ஒரு மரத்தை நட்டு அல்லது விதைவிதைத்து விவசாயம் செய்து, அதிலிருந்து (அதன் விளைச்சலை அல்லது காய்கனிகளை) ஒரு பறவையோ, ஒரு மனிதனோ அல்லது ஒரு பிராணியோ உண்டால் அதன் காரணத்தால் ஒரு தர்மம் செய்ததற்கான பிரதிபலன் அவருக்குக் கிடைக்கும்.[நூல்;புஹாரி]

மரத்தை வெட்டி சுற்றுச்சூழலை கெடுப்பவர்களுக்குமத்தியில், மரத்தை நடுவதை நன்மைக்குரியதாக சொல்லிக்காட்டி மனிதனின் எல்லாவிதமான நல்வாழ்க்கைக்கும் வழிகாட்டும் ஒரே மார்க்கமாக இஸ்லாம் திகழ்கிறது. அல்ஹம்துலில்லாஹ்!