வெள்ளி, 18 நவம்பர், 2011

பாபரி மஸ்ஜித் மீட்பு ரத யாத்திரையின் ரத அறிமுக நிகழ்ச்சி

பாபரி மஸ்ஜித் மீட்பு ரத யாத்திரையின் ரத அறிமுக நிகழ்ச்சி 

இந்திய தவ்ஹீத் ஜமாஅத் நடத்தவிருக்கும் பாபரி மஸ்ஜித் மீட்பு மற்றும் சமூக நல்லிணக்க ரத யாத்திரைக்கான ரதம் அறிமுக நிகழ்ச்சி இன்று (18-11-2011) சென்னை பத்திரிகையாளர் சங்கத்தில் நடைபெற்றது.  
இந்நிகழ்ச்சிக்கு ஐஎன்டிஜே மாநிலத் துணைத் தலைவர் முஹம்மது முனீர் தலைமை வகித்தார். "பாபரி மஸ்ஜித் மீட்பு யாத்திரைக்கென வடிவமைக்கப்பட்டிருக்கும் ரதத்தை பத்திரிகையாளர்களுக்கு அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி இது" என்று முஹம்மது முனீர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பத்திரிகையாளர்கள் மத்தியில் பேசிய ஐஎன்டிஜே தலைவர் எஸ்.எம். பாக்கர்,
 
''பாபரி மஸ்ஜித் மீட்பு மற்றும் சமூக நல்லிணக்க யாத்திரையை பொறுத்தவரை எங்களது உரிமைகளை மீட்டெடுக்கும் முகமாக சமூக மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் இதன் நோக்கம்.
இந்த யாத்திரையை எங்கள் தொப்புள் கொடி உறவுகளான முஸ்லிமல்லாத சகோதரர்கள்தான் துவக்கி வைக்கிறார்கள். அதனால் இது சமூக நல்லிணக்க பயணமாகவும் அமைந்திருக்கிறது.
 
மீனவர் சங்கத் தலைவர் கபடி மாறன், யாதவ மகா சபை தலைவர் தி.தேவநாதன், புதிய தமிழகம் டாக்டர் கிருஷ்ணசாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன், மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் டாக்டர் சேதுராமன், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார், மனித உரிமை ஆர்வலரான அ. மார்க்ஸ், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்துர் மணி, நாடு கடந்த தமிழீழ தோழமை மையத்தின் பேரா. சரஸ்வதி, அரசியல் விமர்சகர் டி.எஸ்.எஸ். மணி, பெண்கள் இணைப்புக் குழுவின் ஷீலு உள்ளிட்ட பல்வேறு பிரமுகர்கள் கலந்து கொண்டு ரத யாத்திரையை துவக்கி வைக்கின்றனர்.
 
ஏறக்குறைய இரண்டு மாத காலம் இந்த யாத்திரை குறித்த விளம்பரங்கள் செய்யப்பட்டு முஸ்லிம் சமுதாயத்தின் மத்தியில் இந்த யாத்திரை பெரும் எழுச்சியை ஏற்படுத்தியிருக்கும் நிலையில் - இதுநாள் வரை அமைதி காத்துவந்த காவல்துறை இப்போது அனுமதி மறுத்திருக்கிறது.
இந்த அரசு அனைத்து சமூக அமைப்புகள், கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகளுக்குக் கூட அவர்களை போராட்டங்களுக்கு அனுமதி அளித்து வருகிறது. இந்த அரசின் பெயரில் வேறுபட்ட கருத்து இல்லை. 
ஆனால் எங்கள் அமைப்பைப் பற்றி காவல்துறை அரசாங்கத்திற்கு தவறான செய்தியை கொடுத்திருக்கிறதா என்று தெரியவில்லை. அரசின் பார்வை எங்களுக்கு சாதகமாகவோ, பாதகமாகவோ எப்படி இருந்தாலும் எங்கள் உரிமையை விட்டுத் தர முடியாது.
காவல்துறை அனுமதி மறுத்த போதிலும் தடையை மீறி யாத்திரை துவங்கும் இன்ஷா அல்லாஹ். தடையை மீறுவது எங்களின் உரிமை. கைது செய்வது காவல்துறையின் கடமை.
 
எங்களால் பொது மக்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாது. யாருக்கும் துன்பம் தராமல் - அசம்பாவிதங்கள் எதுவும் நிகழாமல் இந்த நிகழ்வு இருக்கும். அந்த அடிப்படையில்தான் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டிருக்கிறது. மக்கள் ஆதரவு அமோகமாக இருக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது.
 
இன்ஷா அல்லாஹ் எங்களை காவல்துறை கைது செய்து இந்த யாத்திரை தொடர்ந்து நடைபெற விடாமல் தடுத்தாலும் எங்களது ஜனநாயக - அடிப்படை உரிமைகளை நிலைநாட்டும் விதமாக இன்ஷா அல்லாஹ் நீதிமன்றத்தை நாடி எங்களது உரிமையை மீட்டெடுப்போம்.
இங்கு வந்திருக்கும் பத்திரிகையாளர்களாகிய உங்களுக்கு உண்மையை உலகிற்கு எடுத்துச் சொல்லும் கடமை இருக்கிறது. இதை நீங்கள் செய்ய வேண்டும்...'' என்றார் தலைவர் எஸ்.எம். பாக்கர்.
பின்னர் பத்திரிகையாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்த தலைவர், பத்திரிகையாளர்களுக்கு யாத்திரைக்கான ரதத்தை அறிமுகப்படுத்தி வைத்தார். வந்திருந்த மீடியாக்களும், புகைப்படக் கலைஞர்களும் தங்கள் கேமிராக்களால் ரதத்தை பல்வேறு கோணங்களில் படம் பிடிக்கத் தொடங்கினர்.
 
இந்நிகழ்ச்சியில் மாநில நிர்வாகிகளான பொதுச் செயலாளர் முஹம்மது சித்தீக், பொருளாளர் அபு பக்கர், மாநிலச் செயலாளர்களான முஹம்மது ஷிப்லி, அபு ஃபைஸல், கலிமுல்லாஹ், தலைமை நிர்வாகக் குழு உறுப்பினர் தக்வா மொய்தீன் மற்றும் வட சென்னை மாவட்ட நிர்வாகிகளான யூசுப்கான், முஹம்மது இஸ்மாயில் மற்றும் தென் சென்னை மாவட்டநிர்வாகிகளான ஆசாத் நகர் சேட், அமைந்தகரை யூனுஸ், ஹபீப், அலுவலக உதவியாளர் மதுக்கூர் முஹைதீன் ஆகியோர் கலந்து கொண்டனர். 
 
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் தொல். திருமாவளவன், அவரது கட்சி பிரச்சார வாகனத்தை ரத யாத்திரையுடன் பிரச்சாரத்திற்காக பயன்படுத்திக் கொள்ளுமாறு எவ்வித பிரதிபலனையும் எதிர்பாராமல் வழங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக