இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டத்திற்கு உட்பட்ட நரிப்பையூர் முஸ்லிம்கள் மத்தியில் கடந்த சில வாரங்களாக "ஹாட் டாபிக்' ஆக இருக்கிறது அந்த விவகாரம்!
ஹனஃபி ஜமாஅத்திற்கு சொந்தமான நிலத்தை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (டிஎன்டிஜே)திற்கு மோசடியாக விற்பனை செய்திருக்கிறது ஒரு குடும்பம். மோசடியாக நிலம் விற்கப்பட்டிருக்கிறது என்று தெரிந்த நிலையிலும் அதனை திருப்பி ஒப்படைக்காமல் ஹனஃபி ஜமாஅத்தோடு மல்லுக் கட்டி வருகிறது உள்ளூர் டிஎன்டிஜே. மாநிலத் தலைமையும் இந்த விஷயத்தில் இது நாள்வரை மௌனம் காத்தே வருகிறது! இந்த விவகாரத்தில்தான் நரிப்பையூர் முஸ்லிம்கள் மத்தியில் சூடான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
உண்மை நிலவரத்தை அறிய நாம் விசாரணையில் இறங்கி னோம். நரிப்பையூரில் இருக்கும் ஷாஃபி ஜமாஅத்தும் ஹனஃபி ஜமாஅத்தும் சேர்ந்து கடந்த 7 வருடங்களுக்கு முன் தட்சிணாமூர்த்தி என்பவரிடமிருந்து 58 செண்ட் நிலத்தை கிரையம் செய்து வாங்கியிருக்கிறன்றன.
வாங்கிய நிலத்தை இரண்டு ஜமாஅத்துகளும் சரிபாதியாக பங்கு பிரித்துக் கொள்வது என்பது அவர்களுக்கிடையே ஏற்பட்ட ஒப்பந்தம். இதன்படி ஹனஃபி ஜமாஅத் தலைவர் ஜலாலுத்தீன் மற்றும் ஷஃபி ஜமாஅத்தின் தலைவர் முஹம்மது இப்ராஹிம் ஆகியோரது பெயரில் வாங்கப்பட்டிருக்கும் இந்த நிலத்திற்கு பத்திரச் செலவு உட்பட 1 லட்சத்து 64 ஆயிரத்து 165 ரூபாய் ஹனஃபி ஜமாஅத் சார்பிலும், இதே அளவு தொகை ஷாஃபி ஜமாஅத் சார்பிலும் கொடுக்கப்பட்டு மொத்தம் 3 லட்சத்து 28 ஆயிரத்து 330 ரூபாய் மதிப்பில் 9-12-2005 அன்று சாயல்குடி பதிவாளர் அலுவலகத்தில் இரு ஜமாஅத் தலைவர்கள் பெயரில் கிரையப் பத்திரம் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நரிப்பையூர் கிராம சர்வே எண். 287/3ஏவில் அடங்கும் இந்த நிலத்தின் கிரையப் பத்திரம் 6 பக்கங்களைக் கொண்டதால் அதில் 1,3,5 ஆகிய பக்கங்களைக் கொண்ட முத்திரைத் தாள்கள் ஜலாலுத்தீனிடமும் 2,4,6 ஆகிய பக்கங்களைக் கொண்ட முத்தி ரைத் தாள்கள் முஹம்மது இப்ராஹிமிடமும் ஒப்படைக்கப்பட்டது.
இந்நிலையில், 2009ம் வருடம் ஜலாலுத்தீன் மரணமடைந்து விடுகிறார். இவரது நான்கு பிள்ளைகளில் மூவர் வெளிநாட்டில் இருக்க... இன்னொரு மகனான கலீல் ரஹ்மான் மட்டும் நரிப்பையூரில் தன் தாயார் மக்தூம் பீவியுடன் இருக்கிறார்.
உள்ளூர் டிஎன்டிஜேவில் கலீல் ரஹ்மான் உறுப்பினராக இருப்பதால் அவரது வேண்டு கோளின்படி, மேற்படி நிலத்தின் தாய்ப்பத்திரங்கள் இரண்டு ஜமாஅத் நிர்வாகங்களில் இருக்கும் நிலையில், போலியான ஆவணங்களைத் தயாரித்து டிஎன்டிஜே மாநிலத் தலைமைக்கு 29 செண்ட் நிலத்தை 13ஆயிரத்திற்கு விற்பனை செய்திருக்கிறார் ஜலாலுத்தீனின் மனைவியான மக்தூம் பீவி.
டிஎன்டிஜே மாநிலத் தலைமைக்கு விற்கப்பட்ட இந்த சொத்திற்கான கிரையப் பத்திரம் நரிப்பையூர் டிஎன்டிஜேவின் தலைவராக உள்ள ஹுமாயூன் கபீர் என்பவர் பெயரில் பதிவாகியுள்ளது.
ஜலாலுத்தீன் ஹனஃபி ஜமாஅத்தின் தலைவராக இருந்து மேற்படி நிலத்தை வாங்கிய காலத்தில் ஹனஃபி ஜமாஅத்தின் துணைப் பொருளாளராக இருந்துள்ளார் ஹுமாயூன் கபீர். இவருக்கு அப்போது ஹனஃபி ஜமாஅத்திற்கு சொத்து வங்கிய கணக்கு விபரங்கள் நன்றாகத் தெரியும் என்றும் இவர் தற்போது டிஎன்டிஜேவில் இருக்கிறார் என்றும் சொல்கின்றனர் ஹனஃபி ஜமாஅத்தினர்.
ஜமாலுத்தீன் குடும்பத்திற்கும் டிஎன்டிஜேவிற்குமிடையில் திரைமறைவில் நடந்த இந்த விவகாரம் தெரியாத நரிப்பையூர் ஹனஃபி மற்றும் ஷாஃபி ஜமாஅத்தினர் பட்டாவை புதுப்பிக்க சாயல்குடி பதிவாளர் அலுவலகத்திற்கு சென்றபோதுதான் விஷயம் தெரிந்திருக்கிறது.
ஹனஃபி ஜமாஅத்தின் தற்போதைய தலைவர் வில்லங்கம் போட்டுப் பார்க்க, ஜமாஅத் சொத்துகள் களவாடப்பட்ட விஷயம் அறிந்த இரண்டு ஜமா அத்துகளும் அதிர்ச்சியடைந்துள்ளன. இதனையடுத்து, மக்தூம் பீவி மற்றும் டிஎன்டிஜேவினர் மீது சாயல்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர் இரு ஜமாஅத்தினரும்!
இந்த தகவல்களைத் திரட்டிக் கொண்ட நாம், இதில் உண்மைத் தன்மையை அறிய ஹனபி ஜமாஅத்தின் பிரதிநிதியாக இருந்து இந்த விவகாரத்தை டீல் பண்ணி வரும் சீனி முஹம்மது என்பவரிடம் பேசினோம்.
""சர்வே எண் 287/3ஏ-ல இருக்குற நிலம் ஹனஃபி, ஷாஃபி ஜமாஅத்துக்குச் சொந்தமானதுதான். ரெண்டு ஜமாஅத்தும் ஏழை மக்களுக்கு வீட்டுமனை கொடுக்குற ஐடியாவுல அந்த இடத்தை வாங்கியிருக்கு. அந்த திட்டம் சில காரணங்களால் நின்னுபோச்சு.
இந்த சொத்து வாங்குனது 2005ல... ஹனஃபி ஜமாஅத் தலைவர் ஜலாலுத்தீன் மரணித்து விட்ட பின் சமீபத்துல அந்த இடத்தை டிஎன்டிஜேவிற்கு13 ஆயிரம் ரூபாய்க்கு கிரையம் செஞ்சு கொடுத்திருக்காங்க ஜலாலுத்தீனோட மனைவி மக்தூம் பீவி. இதற்கு உள்ளூர் டிஎன்டிஜேவுல இருக்குற ஜலாலுத்தீன் மகன் கலீல் ரகுமானும், டிஎன்டிஜே கிளைத் தலைவர் ஹுமாயூன் கபீரும் பின்னணியில செயல்பட்டிருக்காங்க.
இந்த ஹுமாயூன் கபீர் ஹனஃபி ஜமாஅத்துல துணை பொருளாளராக இருந்தவரு. இவரு பேர்லதான் கிரையம் பண்ணி டிஎன்டிஜேவுக்காக எழுதிக் கொடுத்திருக்காங்க.
இதுல வாரிசு சர்டிபிகேட் கூட முறைப்படி எடுக்கலை. ரெண்டு பேரு (ஜமாஅத்) சேர்ந்து வாங்குன இடத்தை முறைப்படி பிரிக்கலை. இதெல்லாம் செஞ்சா வெளியே தெரிஞ்சுடும்னு களவாடனுங்கிற எண்ணத்துல, ஜலாலுத்தீனோட வாரிசுகள் எல்லாம் சேர்ந்து அவங்க தாயார் மக்தூம் பீவிக்கு பவர் கொடுத்ததா டாக்குமெண்ட் ரெடி பண்ணியிருக்காங்க.
இந்த பவர் கூட முறைப்படி இல்ல. ஏன்னா ஜலாலுத்தீனோட மூத்த மனைவிக்கு பிறந்த ரெண்டு பிள்ளைகள்ல முஹம்மது இப்ராஹிம்ங்கிறவரு இறந்து போயிட்டாரு. அவரோட வாரிசுகளுக்கும் தெரியாம இந்த "பவர் கேம்' நடந்திருக்கு.
இந்த நிலைமையில பிப்ரவரி 8ம் தேதிதான் இந்த இடம் சம்பந்தமா இவங்க போலியான பத்திரம் தயார் பண்ணியிருக்கி றது தெரிய வந்துச்சு.முறைப்படி போலீஸ்ல கம்ப்ளைண்ட் பண் ணுனோம்.
இந்தப் பிரச்சினை சம்மந்தமா ஆரம்பத்துல ஹுமாயூன் கபீரோட உறவினர் மூலமாவே நான் விசாரிச்சேன். அப்போ, ""இந்தப் பிரச்சினை சீனிக்கு சம்பந்தமில்லாதது. அவனை அதுல தலையிட வேண்டாம்னு சொல்லு. அவன்தான் இந்தப் பிரச்சினையை கிளறுறான்னு...'' பதில் சொல்லியிருக்காரு ஹுமாயூன் கபீர்.
இதனால உள்ளூர் டிஎன்டிஜே கிட்ட நியாயம் கிடைக்காதுன்னு மாவட்ட, மாநில டிஎன்டிஜேவுக்கு கடிதம் எழுதினேன். இஸ்லாமிய மார்க்க சட்டப்படி இந்த இடம் ஹனஃபி ஜமாஅத்துக்குத்தான் சொந்தம்னு சொல்லி அதுக்குண்டான "சப்போர்டிவ் எவிடென்ஸ்' எல்லாம் சேர்த்து அனுப்பி வைத்தேன்.
இது சம்பந்தமா தொடர்ந்து டிஎன்டிஜே மாநில பொதுச் செயலாளர் கோவை. ரஹ்மத்துல்லாஹ்கிட்ட பலமுறை பேசினேன். அதோட மாநில நிர்வாகிகள் எல்லோரிடமும் பேசினேன். அதுல மாநிலச் செயலாளர் மாலிக் கொஞ்சம் நியாய உணர்வோட பேசினாரு.
அவரு எல்லா ஆதாரங்களையும் பார்த்திருக்காரு. அவரு என்ன சொன்னாருன்னா... ""தம்பி.. அநியாயமான முறையில அபகரிச்சு இருந்தா உடனே கொடுத்துத்தான் ஆகனும். ஆனா இதுல நான் தலையிட முடியாது. கோவை ரஹ்மத்துல்லாஹ்தான் விசாரிக்கனும்''னு அமைதியான முறையில தன் ஆதங்கத்தை வெளியிட்டாரு. பாவம்! அவருக்கு அங்கே பேசறதுக்கு வாய்ப்பு இல்லைபோல...!! என்று நீண்ட விளக்கம் கொடுத்து நிறுத்திய சீனியிடம்,
""டிஎன்டிஜே மாநிலப் பொதுச் செயலாளர் என்ன சொன்னார்?'' என்று நினைவூட்டினோம்.
""அவரு, நீங்க மாவட்டத்தை தொடர்பு கொள்ளுங்கன்னாரு. அப்ப, "என்னங்க? தலைமைக்கு தொடர்பு கொள்ளாம மாவட்டம் எப்படி வாங்கியிருக்கும்'னு நான் கேட்டப்ப... இல்ல பாய்... எங்ககிட்ட காட்டுன டாக்குமென்ட் ஃபேவரா இருக்குற மாதிரி தெரிஞ்சுச்சு. அதனாலத்தான் நாங்க வாங்கியிருக்கோம்னாரு ரஹ்மத்துல்லாஹ்.
அதுக்கு நான், ""அது ஃபேவர் இல்ல. போலியா கிரியேட் பண்ணப்பட்டிருக்கு. நீங்க நேரில் வந்து பார்வையிடுங்க; விசாரிங்க...''ன்னு சொன்னதுக்கு, ""நீங்க யாருங்க? நீங்க சொல்றதையெல்லாம் நான் எப்படி நம்ப முடியும்?''னாரு. அப்ப நான், டிஎன்டிஜேவுல இருக்குறவங்கெல்லாம் உண்மையைத்தான் பேசுவாங்களா? அதுல திருடன் இருக்க மாட்டானா? இல்லைன்னா டிஎன்டிஜே ஜமாஅத்துக்கு வெளியில இருக்குறவங்க எல்லாம் திருடங்களா?பொய்யைத்தான் பேசுவாங்களா?ன்னு கேட்க, அப்படியே வாக்குவாதம் ஏற்பட்டவுடனே... ""நான் டிரைன்ல போய்ட்டிருக்கேன். நீங்க எங்க மாவட்டத் தலைவர் அனீஸ் ரஹ்மான்கிட்ட பேசிக்குங்க...''ன்னு போனை கட்பண்ணிட்டார்...'' என்று சொன்ன சீனி தொடர்ந்து,
""அப்புறம் நானும் ஹனஃபி ஜமாஅத் செயலாளரும் போய் டிஎன்டிஜே மாவட்ட நிர்வாகிகள்ட பேசுனோம். 2 மணி நேரத்துக்கு மேல நடந்த பேச்சுவார்த்தையில, ""நாங்க ஒத்துக்க மாட்டோம். யார் சொத்து கொடுத்தாலும் வாங்குவோம்னு சொன்னாங்க அவங்க.
நாங்க டாக்குமெண்ட்களை காட்டியும் நீங்க ஏத்துக்க மாட்டேங்கிறீங்க. நரிப்பையூருக்கு நீங்க வாங்க! எல்லா செலவையும் நானே ஏத்துக்குறேன்.அங்க வந்து ஊர்காரங்க எல்லார்டயும் விசாரிங்க. இந்த சொத்து யாருடையது? எப்படி கை மாறுச்சு? யாருக்குச் சொந்தமானதுன்னு விசாரிச்சுப் பாருங்க!நாங்கதான் பொய் சொல்றோம்னு நினைச்சா... ஊர்காரங்க எல்லாருமா பொய் சொல்லுவாங்க? அப்படின்னு சொன்னதும், எங்களுக்கு இது பொய்யின்னு தெரிஞ்சுச்சுன்னா... உடனே நாங்க நிலத்தை கொடுத்திடறோம். சம்பந்தப்பட்ட கிளை நிர்வாகிகளை டிஎன்டிஜேவை விட்டும் நீக்கிடறோம்னு சொன்னாங்க!
உடனே நாங்க, ""நீங்க அப்படி நியாயத்தை விளக்கிட்டீங்கன்னா எங்க செலவுலேயே டிஎன்டிஜேவுக்கு நன்றி தெரிவிச்சு ஊர் பூராவும் போஸ்டர் ஒட்டுறோம்னு சொன்னோம். அவங்க 4 நாள் டைம் கேட்டாங்க. 4 நாள் பத்து நாளாச்சு. அவங்களைக் காணோம். போன் பண்ணி கேட்டா, ""நான் மாநிலத்தை கேட்டிருக்கேன். மாநிலம்தான் பதில் சொல்லனும்''ங்கிறார் மாவட்டத் தலைவர் அனீஸ் ரஹ்மான். மறுபடியும் மாநிலத்துக்கு போன் பண்ணி கோவை ரஹ்மத்துல் லாஹ்கிட்ட கேட்டா... நீங்க மாவட்டத்துக்கிட்டதான் கேட்கனும்ங்கிறாரு அவரு. இவங்கள்ட கேட்டா மாநில தலைமைகிட்ட கேளுங்கிறாங்க... மாநிலத் தலைமைகிட்ட கேட்டா மாவட்டத்துக்கிட்ட கேளுங்கிறாங்க...'' என்று நிலத்தை மீட்கதான் எடுத்த முயற்சிகளை விரிவாக விளக்கிய சீனி,
""நிலப் பிரச்சினையில் டிஎன்டிஜே கிளைதான் தப்பு பண்ணியிருக்குன்னு அவங்க தலைமை மேல நம்பிக்கை வச்சு அவங்ககிட்ட போனா... கிளை மட்டும் இல்ல தலைமையும் அடுத்தவங்க சொத்தை அபகரிக்குற போக்குலதான் இருக்குன்னு தெரியுது...'' என்றவரின் குரல் சற்றே உயர்ந்தது.
""நடுநிலையா இருக்கும் முஸ்லிம் சமுதாய மக்கள் டிஎன்டிஜேவுக்கு ஆதரவு வழங்கக் கூடாது. ""நபி (ஸல்) அவர்களின் பேரன் பைத்துல்மால்(பொதுச் சொத்து) பொருள்ல இருந்து ஒரு பேரித்தம் பழத்தை சாப்பிட்டப்போ... நபி (ஸல்) அவர்கள் அதை துப்பச் சொன்ன ஹதீஸை டிஎன்டிஜே தலைவர் பீ.ஜே. எவ்வளவு அழுத்தம் கொடுத்துப் பேசுறாரு. அவரு உண்மையிலேயே இஸ்லாமிய அடிப்படையிலதான் வாழறேன்; குர்ஆன் ஹதீஸைஸத்தான் சொல்றேன்னு இமயம் டி.வி.யில் தோன்றி சொல்வதற்கும், ஊர் ஊரா போய் பிரச்சாரம் பண்றதுக்கும் நினைச்சார்னா எங்க ஹனஃபி ஜமாஅத்தோட சொத்தை திருப்பிக் கொடுத்துட்டு பிரச்சாரம் பண்ணட்டும். அதுவரைக்கும் அவருக்கோ, டிஎன்டிஜேகாரங்களுக்கோ பிரச்சாரம் பண்ணுற அருகதையே இல்லை! இதை என் கருத்தாவே போடுங்க...'' என வெடித்தார் சீனி முஹம்மது.
இந்தப் பிரச்சினை குறித்து டிஎன்டிஜேவினர் என்ன சொல்கிறார்கள் என்பதை அறிய அந்த அமைப்பின் மாவட்டச் செயலாளர் காதரியா-வை தொடர்பு கொண்டோம்.
நம்மை அறிமுகப்படுத்திக் கொண்ட நாம், ""ஹனஃபி ஜமாஅத்திற்கு சொந்தமான நிலத்தை டிஎன்டிஜே வாங்கியிருப்பதாகவும் அது தொடர்பாக உங்க மாவட்ட நிர்வாகிகளோடு பேசியபின், தவறாக இருந்தால் திருப்பிக் கொடுத்து விடுவோம்; தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று உங்கள் தரப்பில் வாக்களித்ததாகவும் ஆனால் அதன்படி இதுவரை நடந்து கொள்ளவில்லை என்றும் சீனி முஹம்மது சொல்கிறாரே உண்மையா?இப்பிரச்சினையில் உங்கள் தரப்பு என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது?'' என்ற கேள்விகளை முன் வைத்தோம்.
""அந்த இடம் மாநிலத்துப் பேர்லதான் எழுதிக் கொடுத்திருக்காப்ல. அதுல என்னன்னு இன்னும் ஒழுங்கா விபரம் தெரியல. மாநிலத்துக்கிட்டதான் கேட்கனும். அவங்க (எதிர் தரப்பு) வந்து சொல்றதையெல்லாம் கேட்க முடியுமா நம்ம? மாநிலம் என்ன சொல்லுதோ அதன்படித்தான் செய்ய முடியும்?''என்று சொன்னவரிடம்,
""ஹனஃபி ஜமாஅத்தோட சொத்துதான் அந்த நிலம் என்பதற்கான ஆதாரங்களை அவர்கள் காட்டினார்களா?'' என்றோம்.
""அப்படியொன்னும் காட்டல...'' என்று மறுத்த காதரியா, ""நீங்க எங்க மாவட்டத் தலைவர்கிட்ட பேசுங்க என்றார்.
நாம் மாவட்டத் தலைவர் அனீஸ் ரஹ்மானிடம், காதரியாவிடம் கேட்ட அதே கேள்விகளோடு இந்தப் பிரச்சினையில் உங்கள் தரப்பு எந்த பதிலையும் சொல்லாமல் அலைகழிப்பதாக சீனி முஹம்மது குற்றம் சுமத்துகிறாரே என்ற கேள்வியையும் சேர்த்துக் கேட்டோம்.
""அவரை கூட்டிக்கிட்டு நீங்க நேரா எங்ககிட்ட வாங்க. பக்கத்துல வச்சுக்கிட்டு கேளுங்க...'' என்றார் அனீஸ்.
அந்த நிலம் தங்களுக்குத்தான் சொந்தம் என்பதற்கான டாக்குமெண்ட் ஆதாரங்களை ஹனஃபி ஜமாஅத்தினர் உங்களிடம் காண்பித்தார்களா? -அடுத்த கேள்வியைக் கேட்டோம்.
""அப்படி ஒண்ணும் காமிச்ச மாதிரி தெரியலை. ஒரேயொரு மெயில் பண்ணியிருந்தாங்க...'' என்றவர், ""எதுக்காக எங்ககிட்ட நீங்க கேட்குறீங்க...?''என்றார். ""மக்கள் ரிப்போர்ட் செய்திக்காகத்தான்...'' என்று நாம் சொன்னதும்,
""மக்கள் ரிப்போர்ட்ல செய்தி போடறதுக்கு நான் ஒண்ணும் சொல்ல முடியாது. மக்கள் ரிப்போர்ட்டுக்கு நான் ஏன் சொல்லனும் நியூசு?அவங்களுக்கு (ஹனஃபி ஜமாஅத் தரப்பிற்கு) தேவைன்னா அவங்கள வரச் சொல்லுங்க. வேற பத்திரிகையை கூட்டிக்கிட்டு வரச் சொல்லுங்க. நீங்க அவங்க (ஐஎன்டிஜே) பத்திரிகையில இருந்துக்கிட்டு கேட்டா எப்படி பதில் சொல்றது?'' என்றவரிடம் ""இது பத்திரிகை தர்மம். உங்கள் தரப்பு நியாயத்தை சொல்லுங்கள் அதை அப்படியே வெளியிடுவோம்...'' என்று நாம் வலியுறுத்தியபோது, ""பதில் சொல்ல மறுத்துட்டாருன்னு போடுங்க...'' என்று கோபத்துடன் லைனை துண்டித்தார் அனீஸ் ரஹ்மான்.
ஹனஃபி ஜமாஅத் தலைவர் குப்பைத் தம்பியிடம் பேசினாம். ""நாங்கள் எல்லா ஆவணங்களையும் காண்பித்தோம். அவர்கள் பொய் சொல்கிறார்கள்.எங்கள் தகப்பனார் சொத்து நாங்கள் அதை டிஎன்டிஜேவிற்கு எழுதிக் கொடுத்திருக்கோம். அதில் என்ன தப்பு என்கிறார்கள் ஜலா லுத்தீன் குடும்பத்தினர்...'' என்று கூறிய அவர், ""நிலத்தை திருப்பி கொடுத்துடனும்னு அவங்க பேசிக்கிற மாதிரி ஒரு செய்தியும் வருது தம்பி...'' என்றார் நம்மிடம்!
நிலத்தை ஜமாஅத்துக்கு விற்பனை செய்த தட்சிணாமூர்த்தியோ, ""நான் ஜமாஅத்திற்காகத்தான் விற்றேன். ஜலாலுத்தீனுக்கு அல்ல. இதை எங்கே வேண்டுமானாலும் வந்து சொல்வேன்...'' என்கிறார்.
இந்நிலையில் நியாயம் கேட்டுப் போராடி வரும் ஹனஃபி ஜமாஅத்தினர், மாவட்ட காவல்துறை, மாவட்ட ஆட்சியர், தென் மண்டல ஐ.ஜி., டி.ஐ.ஜி.,முதல்வரின் தனிப் பிரிவு என பல மட்டதிலும் புகார் மனு அனுப்பி விட்டுக் காத்திருக்கின்றனர்.
இராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு நரிப்பையூர் ஹனஃபி ஜமாஅத்தின் செயலாளர் சிக்கந்தர் அனுப்பியுள்ள புகார் மனுவில், ""நாங்கள் அப்படித்தான் செய்வோம்! நாங்கள் பண பலம், ஆள் பலம் உள்ளவர்கள். உங்களால் முடிந்ததைப் பார்த்துக் கொள்ளுங்கள். மீறி எங்களைத் தொந்தரவு செய்தால் கொலை செய்யாமல் விடமாட்டோம்...'' என்று நிலத்தை அபகரிக்க முயற்சிக்கும் நபர்கள் மிரட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.
இதைப் படித்தவுடன் நமக்கு திருவிடைச்சேரி சம்பவம் நினைவுக்கு வந்தது.
- ஃபைஸ் & கீழை அபு முஜாஹித்
டிஎன்டிஜேவிற்கு "குட்பை'
நரிப்பையூர் டிஎன்டிஜே கிளையின் பொருளாளராக கடந்த சில நாட்களுக்கு முன்புவரை யூசுஃப் கனி என்பவர் இருந்துள்ளார். இவர் பொருளாளராக இருந்த நிலையிலேயே கிளைத் தலைவராக இருந்த ஹுமாயூன் கபீர் தற்காலிக பொருளாளராக மாற்றப்பட்டு இவரது பெயரில் 29 செண்ட் நிலம் கிரையம் செய்யப்பட்டிருக்கிறது.
கிரையப் பதிவுகள் முடிந்தவுடன் தலைவராக மீண்டும் ஏற்றம் பெற்றிருக்கிறார் ஹுமாயூன். அசல் பொருளாளரான யூசுஃப் கனிக்கு நிலம் தொடர்பான எந்த விஷயமும் தெரியாதாம். பிரச்சினை வெடித்த பின்தான் இவருக்கு தெரிந்திருக்கிறது. நிலம் குறித்து சக நிர்வாகிகளிடத்தில் கேட்டிருக்கிறார். சில நியாயங்களையும் கேட்டு விட்டு ""இனியும் நான் இங்கு இருக்க மாட்டேன்...'' என்று டிஎன்டிஜேவிற்கு குட்பை செல்லிவிட்டாராம்.
நீதிக்கான போராட்டத்தில்...
நீதி கேட்டு பல்வேறு வகையில் போராடிவரும் நரிப்பையூர் ஹனஃபி ஜமாஅத்தினர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத்தின் இராமநாதபுரம் மாவட்டத் தலைமையையும் அணுகி எங்களுக்கு நீதியைப் பெற்றுத் தாருங்கள், அநியாயத்தை தட்டிக் கேட்கும் வகையில் நாங்கள் ஏற்பாடு செய்துள்ள பொதுக் கூட்டத்தில் உங்கள் தலைவர் எஸ்.எம். பாக்கர் வந்து பேச வேண்டும் என கோரிக்கை வைக்க... கடந்த 4ம் தேதி நரிப்பையூரில் நடந்த பொதுக் கூட்டத்தில் எஸ்.எம். பாக்கர், மாநிலச் செயலாளர் செங்கிஸ்கான், மாநிலப் பேச்சாளர் முஹம்மது முஹியித்தீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் உரையாற்றிய தேசியத் தலைவர் எஸ்.எம். பாக்கர், நில அபகரிப்பு தொடர்பாக குர்ஆன் - ஹதீஸ் கூறும் எச்சரிக்கைகளை எடுத்து விளக்கியதோடு,சம்பந்தப்பட்டவர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி நிலத்தை உடனடியாக உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும்; நீதிக்கான இந்தப் போராட்டத்தில் ஐஎன்டிஜே ஹனஃபி ஜமாஅத்திற்கு துணை நிற்கும். இந்தப் பிரச்சினையில் மாவட்ட நிர்வாகம் உடனடினயாக தலையிட்டு ஆர்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிட்டு பிரச்சினையை சுமூகமாகத் தீர்க்க முயல வேண்டும். இந்த நிலம் தொடர்பான பிரச்சினையில் நியாயம் கிடைக்காவிட்டால் மக்களைத் திரட்டி வீரியமான போராட்டங்களை ஐஎன்டிஜே முன்னெடுக்கும்...'' என்றெல்லாம் பேசினார்.
நன்றி; சமுதாய மக்கள் ரிப்போர்ட் வாரஇதழ்.