வியாழன், 8 மார்ச், 2012

வாடைகைக்கு குடியிருப்போர் விபரம் கேட்கும் காவல்துறை; சட்டம் ஒழுங்கை காக்குமா?

சென்னை மாநகரத்தில்  வசிக்கும் மக்கள் அனைவரும் சென்னையை பிறப்பிடமாக கொண்டவர்கள் அல்லர். அவர்களில் பெரும்பான்மையினர் தென் மாவட்டங்கள் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொழில் மற்றும் வேலை நிமித்தமாகவும், கல்வி நிமித்தமாகவும் சென்னையில் வந்து குடியேறியவர்கள் தான். தமிழர்கள் மட்டுமன்றி இந்தியாவின் வேறு மாநிலத்தைச் சேர்ந்த குறிப்பாக கேரளா-ஆந்திரா-ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் சென்னையில் மையம் கொண்டு வசித்து வருகின்றனர். 

சென்னையில் திருமணமாகாதவர்களுக்கும், ஏழ்மையில் உள்ளாவர்களுக்கும் அவ்வளவு எளிதில் வீடு கிடைத்து விடுவதில்லை. அதே நேரத்தில் டிப்டாப்பாக கொஞ்சம் 'பசை'உள்ள பார்ட்டிகள் என்றால் எளிதில் வீடு கிடைத்து விடும். வாடகைக்கு வீடுகளை அமர்த்தி தருவதையே தொழிலாக செய்யும் நபர்களும் உண்டு. ஒரு கடையை வாடகைக்கு விடும்போது எழுதபப்டும் ஒப்பந்தம் போன்று வீடு வாடகைக்கு  விடும்போது  பெரும்பாலும்  எழுதப்படுவதில்லை .வெறுமனே வாடகை இவ்வளவு; அட்வான்ஸ் இவ்வளவு; கரண்டு பில் இவ்வளவு என்பனபோன்ற சில கண்டிஷன்கள் வாய்மொழியாக பேசப்படும். அதோடு வாடகைக்கு வருபவரின் உண்மையான முகவரியை உறுதி செய்யும் வகையில் அவரது ரேஷன் கார்டு நகலோ, வாக்காளர் அடையாள அட்டைகளோ பெறும் வீட்டு உரிமையாளர்கள் மிக மிக குறைவே. அட்வான்சும் வடாகையும் ஒழுங்கா வந்தா சரி என்ற ரீதியில் வீட்டு உரிமையாளர்கள் நடந்து கொள்வதால், வீட்டில் தங்குபவர்கள் ஏதேனும் செய்துவிட்டால் வீட்டு உரிமையாளர்கள் தேவையற்ற இன்னல்களை சந்திக்கும் நிலை ஏற்படுகிறது. குடஈருந்த வீட்டிலேயே ஒரு கெட்டவன் கை வைத்துவிட்டு கம்பி நீட்டிவிட்டால் கூட அவனை கண்டுபிடிப்பதற்கு வீட்டு உரிமையாளர்களிடம் பெரும்பாலும் எந்த தடயமும் இருப்பதில்லை. இந்நிலையில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் ஒரு அருமையான திட்டத்தை சென்னை மாநகர காவல்துறை நடைமுறைப்படுத்தியுள்ளது.
 
வாடகைக்கு குடியிருப்பவர்கள் பற்றிய தகவல்களை புள்ளி விவரங்களுடன் வீட்டு உரிமையாளர்கள் தெரிவிக்க வேண்டும் என்பதுதான் அது. இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் திரிபாதி அதிரடியான உத்தரவுகளையும் பிறப்பித்துள்ளார்.   இந்த உத்தரவை மீறி செயல்படும் வீட்டு உரிமையாளர்களுக்கு குறைந்த பட்சம் ஒருமாதம் ஜெயில் தண்டனையும் 200 ரூபாய் அபராதம் விதிக்க சட்டத்தில் இடம் உள்ளது.
 
அதே நேரத்தில் குற்றவாளி ஒருவருக்கு வீட்டு உரிமையாளர் ஒருவர் தனது வீட்டை வாடகைக்கு விட்டு... அதன்மூலம் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏறபட்டால் சம்பந்தப்பட்ட வீட்டு உரிமையாளர் 6 மாதம் வரை சிறையில் அடைத்து 1000 ரூபாய் அபராதமும் விதிக்கலாம். (தங்களது வீட்டில் குடியிருப்பவர்கள் பற்றி தகவல் தெரிவிக்காத பட்சத்தில் உரிமையாளர்கள் மீது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.) அந்தந்த பகுதி போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இப்பணியை தீவிரமாக மேற்கொள்ள தொடங்கிவிட்டனர். இதற்கான விண்ணப்பங்கள் போலீஸ் நிலையத்தில் கிடைக்கும். போலீஸ் நிலையங்களுக்கு சென்று அதற்கான விவரங்களை உரிமையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம். அதன் விவரம் வருமாறு:-
 
வீட்டு உரிமையாளர்களுக்கு வாடகைதாரர்கள் தகவல் படிவம் என்ற பெயரில் ஒரு விண்ணப்பம் வழங்கப்படும். அதில் முதல் 3 பிரிவுகளில் வீட்டு உரிமையாளர்கள் தங்களது பெயர், தொழில், முகவரி ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும். அதற்கு கீழே 7 பிரிவுகள் இடம் பெற்றிடும். அதில் வாடகைக்கு குடியிருப்பவர்களின் பெயர், நிரந்தர முகவரி, செய்யும் தொழில், தற்போதைய முகவரி, வீட்டில் குடியிருக்கும் மற்றவர்களின் விவரங்கள், இதற்கு முன் குடியிருந்த வீட்டின் முகவரி, அந்த வீட்டை காலி செய்த தேதி ஆகியவற்றை பூர்த்தி செய்து போலீஸ் நிலையத்தில் வழங்க வேண்டும்.  
 
போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை ஒன்றையும் அதனுடன் இணைக்க வேண்டும். பாஸ்போர்ட், டிரைவிங் லைசென்ஸ், ஆயுத உரிமம், ரேஷன்கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வருமானவரி அட்டை ஆகியவற்றால் ஏதாவது ஒன்றை கொடுக்கலாம்.
 
தகவல் படிவத்தின் ஓரத்தில் வாடகைக்கு இருப்பவரின் போட்டோ ஒட்டப்பட வேண்டும். உரிமையாளர்கள், வாடகைதாரர்கள் 2 பேரும் தாங்கள் தெரிவித்துள்ள தகவல்கள் அனைத்தும் உண்மை என கூறி அதில் கையெழுத்தும் போடவேண்டும்.
 
இந்த படிவத்தின் நகல் ஒன்று வீட்டு உரிமையாளரிடம் வழங்கப்படும்.   வாடகைக்கு குடியிருக்கும் ஒருவர் வீட்டை காலி செய்தால் அதுபற்றிய விவரங்களை தெரிவிக்க வேண்டுமா? என்ற கேள்வியும் எழும். இதுபோன்ற நேரங்களில் வீட்டை காலி செய்து செல்பவர்கள் பற்றி உரிமையாளர்கள் கவலைப்பட தேவையில்லை. அவருக்கு பதில் புதிதாக வருபவர்களை பற்றிய தகவல்களை போலீஸ் நிலையத்தில் கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.
 
வீட்டு உரிமையாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த கட்டுப்பாடுகள் மூலம் குற்றவாளிகளுக்கு பயம் ஏற்படும்.   வெளிமாநிலங்களில் இருந்தோ, வெளி மாவட்டங்களில் இருந்தோ சென்னைக்கு வந்து தங்கிக் கொள்ளலாம் என்று நினைக்கும் குற்றவாளிகளின் எண்ணம் இனி ஈடேறாது. இதுபோன்ற நிலை ஏற்பட்டு விட்டாலே சென்னையில் பாதிக்கு மேல் குற்றங்கள் குறைந்து விடும் என சென்னை மாநகர காவல்துறை நம்புகிறது. அதே நேரத்தில் சிம் கார்டு தொடங்கி பாஸ்போர்ட் வரை பெருகிவிட்ட போலி முகவரிகள், இதிலும் வந்துவிடாமல் விழிப்புடன் கண்காணிப்பது காவதுறையின் கையில் தான் உள்ளாது. மேலும், இது சென்னை மட்டுமன்றி ஒட்டுமொத்த தமிழகத்திலும் செம்மையாக அமுல்படுத்தப்பட வேண்டும்.இல்லையென்றால், இந்தச் சட்டமும் ஏட்டளவில் முடங்க வாய்ப்புண்டு.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக