வியாழன், 16 பிப்ரவரி, 2012

காதலர் தின எதிர்ப்பு; காவியின் நோக்கமா? கலாச்சாரத்தின் தாக்கமா?

காதலர்தினம் என்பது ஒழிக்கப்பட வேண்டிய ஒன்றாகும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. காதலர் தின கொண்டாட்டத்தை சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்த்து வந்தாலும், இந்துத்துவா சிந்தனையாளர்கள் இதை கடுமையாக எதிர்ப்பதை நாம் பார்க்கிறோம். இவர்களின் இந்த எதிர்ப்புணர்வுக்கு காரணம் நாட்டின் கலாச்சாரத்தின் மீதான காதலா என்றால் இல்லை என்பதுதான் உண்மை. ஏனென்றால் கலாசார சீரழிவின் உச்சத்தில் இருப்பவர்கள் இந்துத்துவாக்கள் தான் என்பதற்கு கர்நாடக அமைச்சர்களின் இப்போதைய நடவடிக்கையே சான்றாக உள்ளது. பிறகு ஏன் இவர்கள் காதலர் தினத்தை எதிர்க்கிறார்கள்? அங்கே தான் ஒளிந்துள்ளது இன்னொரு மதத்துவேஷம். ஆம். காதலர்தினம் என்பது கிறிஸ்தவ மதத்தவர் சம்மந்தப்பட்ட ஒன்றாகும். எனவே தான் இந்துத்துவாக்கள் எதிர்க்கிறார்கள். ஆனால் நேரடியாக இவ்வாறு சொல்லமுடியாததால், கலாச்சாரம் ஆபாசம் என்ற போர்வையை போர்த்திக் கொண்டு எதிர்ப்பார்கள். காதலர் தினம் குறித்து வீரத் துறவி[!]யும், இந்து முன்னணி அமைப்பாளருமான ராம.கோபாலன் ஒரு அறிக்கை விடுத்துள்ளார். அதில், 

''நமது நாட்டைக் குறிவைத்து பல தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. சில நேரிடையாக வந்து தாக்குகின்றன, சில கொல்லைப்புறமாக , மறைமுகமாக வருகின்றன. அவை நமது பண்பாட்டை, கலாச்சாரத்தைக் கெடுக்கும் நச்சுப் பிரச்சாரங்கள். அப்படிப்பட்ட ஒன்று தான் காதலர் தினம். இதன் நோக்கம் கலாச்சாரத்தைச் சீரழிப்பது, சந்தையை வளர்ப்பது. எவ்வாறு அட்சயதிருதியைக்கு தங்கம் வாங்குங்கள் என்று விளம்பரப்படுத்தப்பட்டு மக்களை மயக்குகிறார்களோ, அதுபோல காதலர் தினத்திலும் விளம்பர உத்தி மூலம் பொருள்கள் வாங்க விளம்பரப்படுத்துகிறார்கள். இதனால் நிறைவது இவர்களது கஜானா.ஆனால் அதற்கு விலையாவது நமது மக்களின் பண்பாடு. இவையெல்லாம் தனிமனித சுதந்திரம் என்ற வாதம் பித்தலாட்டமானது. இதை அனுமதித்தால் தேசத்தின் அடையாளம் அழிந்து போகும். இந்த விஷ வித்தை அலட்சியப்படுத்தினால் அது வளர்ந்து, பல கிளைகளைப் பரப்பி நாசம் செய்துவிடும்.'' என்று கூறியுள்ளார். 

ராமகோபால அய்யரின் கருத்தை ஊன்றி கவனித்தால் ஒன்று புலப்படும். காதலர்தினம் எப்படி சந்தையை வளர்க்க வியாபாரிகள் செய்த திட்டம் என்கிறாரோ, அதேபோல, அட்சயதிருதியை அன்று தங்கம் வாங்குவது என்பது பக்தி சார்ந்த விசயமல்ல. அன்று தங்கம் வாங்கினால் பெருகும் என்பது கட்டுக்கதை. இவ்வாறு வியாபாரிகள் தான் கதையளந்து மக்களை மயக்குகிறார்கள் என்று அய்யர் அவரையும் அறியாமல் ஒப்புக்கொண்டுள்ளார். நாம் வரவேற்கிறோம். எனவே ராமகோபாலன் அவர்களிடம் நாம் கேட்பது, காதலர் தினம் என்றபெயரில் வியாபாரமாக்கல் குறித்து வியர்த்துப் போய் அறிக்கை வெளியிட்ட நீங்கள், இதே போன்று அட்சயதிருதியை அன்று தங்கம் வாங்குவது மூடத்தனம் என்றும் ஒரு அறிக்கை வெளியிட்டால், உங்களுக்கு உண்மையிலேயே கொஞ்சம் சமுதாய அக்கறை உள்ளது என மக்கள் நம்புவதற்கு வாய்ப்பாக அமையும் செய்வீர்களா?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக