வியாழன், 23 பிப்ரவரி, 2012

வாரம் தவறாமல் வாங்கிக் கட்டிக் கொள்ளும் மோடி அரசு!

குஜராத்தை ஆளும் மோடி திறமையான முதல்வர்; அவரது ஆட்சியில் குஜராத் ஒளிர்கிறது. மோடி பிரதமரானால் இந்தியாவே ஒளிரும் என்று ஒருபுறம் வஞ்சப்புகழ்ச்சி அணிகள் கோரஸ் பாடிக்கொண்டிருக்க, மறுபுறமோ வாரம் தவறாமல் நீதிமன்றத்தில் வாங்கிக் கட்டிக்கொண்டு வகை தொகை தெரியாமல் முழித்து வருகிறார் வர்ணாசிரம மோடி.

கோத்ரா சம்பவத்துக்குப் பின்னர் நடைபெற்ற கலவரத்தில் கலவரத்தின்போது 500-க்கும் மேற்பட்ட வழிபாட்டுத் தலங்கள் இடிக்கப்பட்டதற்கு உரிய இழப்பீடு வழங்காதது அரசின் அக்கறையின்மையையே காட்டுகிறது என்று கடந்த பிப்ரவரி 8-ம் தேதி அளித்தத் தீர்ப்பில் மாநில அரசுக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருந்தது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அதற்காக மோடி வாங்கிய 'குட்டு' காயம் ஆறுவதற்குள் அடுத்த சாட்டையை சுழற்றியுள்ளது உயர்நீதிமன்றம்.

2002-ல் கோத்ரா சம்பவத்துக்குப் பின்னர் நடைபெற்ற கலவரத்தில் ஆமதாபாதில் 56 கடைகள் எரிக்கப்பட்டன. கலவரத்தால் பாதி
க்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவியை மத்திய அரசு 2008 பிப்ரவரியில் அறிவித்தது. இதையடுத்து, தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்தனர். அவர்களது மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாததையடுத்து உயர் நீதிமன்றத்தில் அவர்கள் வழக்குத் தொடர்ந்தனர். அவர்களுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும் என கடந்த ஆண்டு செப்டம்பரில் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், அவர்களது மனுக்கள் 2011 ஆகஸ்டிலேயே நிராகரிக்கப்பட்டுவிட்டதாக இந்த மாதத் தொடக்கத்தில் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை மாவட்ட ஆட்சியரும், மாநில அரசும் செயல்படுத்தவில்லை எனக் கூறி நீதிமன்ற அவமதிப்பு மனுவை உயர் நீதிமன்றத்தில் கடை உரிமையாளர்கள் தாக்கல் செய்தனர்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் அகில் குரேஷி, சி.எல்.சோனி ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது. தங்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகளை ஏன் மேற்கொள்ளக் கூடாது என்பதற்கு மார்ச் 14-க்குள் விளக்கம் அளிக்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

குஜராத் உயர்நீதிமன்றத்தின் இந்த சாட்டியாடியை எவ்வாறு எதிர்கொள்வது என முதுகை தடவிக்கொண்டே மோடி யோசித்துக் கொண்டிருக்கையில், உச்சநீதிமன்றம் 'நச்' சென்று ஒரு கண்டனத்தை மோடிக்கு பதிவு செய்துள்ளது. 2002கலவரத்தில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் சட்டவிரோதமாக தோண்டி எடுக்கப்பட்ட வழக்கில் பிரபல சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட்டுக்கு எதிராக விசாரணை நடத்தியதற்காக குஜராத் அரசைக் கண்டித்துள்ள உச்சநீதிமன்றம், ''இந்த வழக்கில் டீஸ்தாவை அரசு குற்றவாளியாக்கப் பார்க்கிறது. இது 100 சதவிகிதம் போலியான வழக்கு என கூறியுள்ள நீதிபதிகள், இத்தகைய வழக்குகளால் குஜராத் அரசுக்கு எவ்வித பெருமையும் கிடைத்து விட்டது என வலுவான கண்டனத்தை பதிவு செய்துள்ளனர்.

இந்த நேரத்தில் இன்னொன்றையும் இங்கு பதிவு செய்தாக வேண்டும். குஜராத் இனச்சுத்திகரிப்பு படுகொலையில் மோடியின் கரம் 'கறை' படிந்துள்ளதையும், முஸ்லிம்களுக்கு எதிரான அக்கலவரத்தில் மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக்கொணர போராடுபவர்களை பொய் வழக்கு போட்டு மோடி சிறையில் தள்ளுவதையும் நீதிமன்றம் கண்கூடாக கண்டும் கூட அவரை தண்டிக்காமல் வெறும் கண்டனத்தை பதிவு செய்வது பாதிக்கப்பட்டவர்களின் கண்ணீரைத் துடைத்துவிடாது என்பதை நீதிமன்றங்கள் உணரவேண்டும். 

அதோடு, தான் ஆளும் மாநிலத்தில் உள்ள நீதிமன்றம் தொடங்கி, உச்சநீதிமன்றம் வரை தொடர்ந்து வாங்கிக்கட்டிக் கொள்ளும் ஒரே அரசியல்வாதி மோடி மட்டும் தான் என நம்புகிறோம். ஆனாலும் மோடி தான் திறமையான முதல்வர் என்று சொல்லித் திரிபவர்கள், நீதிமன்ற தொடர் கண்டனத்திற்கு பின்பாவது திருந்தட்டும்.
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக