வியாழன், 23 பிப்ரவரி, 2012

ஆர்எஸ்எஸ்., மதவாத இயக்கம் மட்டுமல்ல, பயங்கரவாத இயக்கம்; சீதாராம் யெச்சூரி விளாசல்.

ஆர்எஸ்எஸ் இயக்கமானது மதவாத இயக்கம் மட்டுமல்ல, பயங்கரவாத இயக்கம் என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. சம்ஜவ்தா எக்ஸ்பிரஸ் குண்டு வெடிப்பு வழக்கில் இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டிருப்பதிலிருந்து இது புலனாகும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் சீதாராம் யெச்சூரி கூறினார்.

2007-ம் ஆண்டு சம்ஜவ்தா குண்டு வெடிப்பு வழக்கில் ஆர்எஸ்எஸ் இயக்கத்துக்குள்ள தொடர்பு இப்போது மேலும் வலுவடைந்துள்ளது. தங்களது அமைப்புக்கு இதில் தொடர்பில்லை என்று ஆர்எஸ்எஸ் தொடர்ந்து மறுத்துவந்துள்ளது. ஆனால் இயக்கத்தைச் சேர்ந்த கமல் செளகான் என்பவரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளது என்று யெச்சூரி கூறினார். யெச்சூரியின் கருத்துகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செய்திப் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அதில் அவர் மேலும் எழுதியிருப்பது:

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த செளகான், நீண்ட காலமாக ஆர்எஸ்எஸ் இயக்கத்தில் இருப்பவர். இந்த அமைப்பின் பல்வேறு நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். 2008-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி மாலேகாவ்னில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதல், ஹைதராபாத்தில் மெக்கா மஸ்ஜித்தில் 2007-ம் ஆண்டு மே 18-ம் தேதி நடைபெற்ற தாக்குதல் மற்றும் ஆஜ்மீர் தர்காவில் 2007-ம் ஆண்டு அக்டோபர் 11-ம் தேதி நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களில் ஆர்எஸ்எஸ் அமைப்புகளுக்கு உள்ள தொடர்புகள் வெளியாகியுள்ளது. இந்த சம்பவங்களைத் தொடர்ந்து இந்தியாவில் பரவிவரும் ஹிந்துத்வா பயங்கரவாதம் வெளி உலகுக்குத் தெரியவந்துள்ளது என்று யெச்சூரி கூறினார்.

பயங்கரவாதத்துக்கு ஜாதி,மத பேதம் இல்லை என்பது புலனாகியுள்ளது. 2008-ம் ஆண்டு நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் கவுன்சில் கூட்டத்தில் நாடு முழுவதும் ஆர்எஸ்எஸ் மற்றும் பஜ்ரங்தளம் அமைப்புகள் மேற்கொள்ளவிருந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் பற்றிய தகவல் வெளியானது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் தீவிரவாதத் தன்மை, நாட்டின் பிரதமராக வாஜ்பாய் இருந்தபோது குறைத்துக் காட்டப்பட்டது. நாட்டின் முக்கியப் பிரச்னைகள் கிடப்பில் போட்டப்பட்டன. தங்களது அரசு 5 ஆண்டுக்காலம் பதவியில் நீடிக்க வேண்டும் என்பதற்காக கூட்டணிக் கட்சியினருக்கு ஆதரவாக செயல்பட்டனர்.

2002-ம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் ஏற்பட்ட வன்முறை போல நாடு முழுவதும் நடத்த திட்டமிடப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார். 2003-ம் ஆண்டு முதல் 2008-ம் ஆண்டு வரையான காலத்தில் பல்வேறு வழக்குகள் மீதான விசாரணை பாரபட்சமாக நடத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் நான்டெட், பார்பானி, ஜால்னா, ஜலேகாவ்ன் ஆகிய பகுதிகளிலும் உத்தரப் பிரதேச த்தில் மாவ் மற்றும் கான்பூரிலும், தமிழகத்தில் தென்காசியிலும் வழக்குகள் பாரபட்சமாக நடந்துள்ளன.

இத்தகைய மதவாத அமைப்புகளின் செயல்பாடுகளை சகித்துக்கொள்ளும் போக்கு ஏற்புடையதல்ல. தங்களது இயக்கத்தில் சிலரது செயல்பாடுகள் இயக்கக் கொள்கையிலிருந்து சற்று விலகிச் செல்வதாக ஆர்எஸ்எஸ் குறிப்பிடுகிறது. அதற்காக ஒட்டுமொத்த இயக்கத்தைக் குறைகூறாதீர்கள் என்றும் வலியுறுத்துகிறது.

ஆனால் இவ்விதம் கூறுவதில் அர்த்தமில்லை. மகாத்மா காந்தியைக் கொன்ற நாதுராம் கோட்சேயின் சகோதரர் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் தங்களது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தின் தீவிர உறுப்பினர்கள் என்று குறிப்பிட்டுள்ளார் என்பதையும் யெச்சூரி சுட்டிக்காட்டியுள்ளார்.

ஆர்எஸ்எஸ் இயக்க நிறுவனரான டாக்டர் ஹெக்டேவாருக்கு முன்னுதாரணாக விளங்கியவர் பி.எஸ் மூன்ஞ்சே. இவர் இத்தாலிக்கு சென்று பாசிச சர்வாதிகாரி முசோலினியை 1931-ம் ஆண்டு மார்ச் 19-ம் தேதி சந்தித்துப் பேசியுள்ளார். மூன்ஞ்சே தனது டைரியில், மார்ச் 20-ம் தேதி எழுதிய விவரத்தில், பாசிச இயக்கத்தால் தான் ஈர்க்கப்பட்டதைக் குறிப்பிட்டுள்ளார். இளைஞர் படையை உருவாக்குவதன் மூலம் இதை சாத்தியமாக்கமுடியும் என்ற முசோலினியின் கருத்தை அவர் ஏற்றார். இதையடுத்து நாடு திரும்பிய அவர் நாசிக்கில் 1935-ம் ஆண்டு மத்திய ஹிந்து ராணுவ கல்வி மையத்தை தொடங்கினார். இந்த மையம்தான் இப்போது ஹிந்துத்வா தீவிரவாத பயிற்சி மையமாக மாறிவிட்டது என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மதச்சார்பற்ற நாடாக திகழும் இந்தியாவை, ஹிந்துக்களின் நாடாக மாற்றும் முயற்சியில் ஆர்எஸ்எஸ் அமைப்பு தீவிரமாக உள்ளது என்று யெச்சூரி குறிப்பிட்டுள்ளார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் சதியை முறியடிக்க வேண்டும் என்று கம்யூனிச தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
நன்றி;தினமணி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக