செவ்வாய், 18 அக்டோபர், 2011

கவுன்சிலர் தேர்தலை புறக்கணித்த முஸ்லிம் சமூகத்தினர்

கோவை, அக்.17: தங்களுக்கு பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டதாகக் கூறி கோவை மாநகராட்சியின் 87 மற்றும் 95-வது வார்டு கவுன்சிலர் தேர்தலை முஸ்லிம் சமூகத்தினர் புறக்கணித்தனர்.

கோவை மாநகராட்சி எல்லை விரிவாக்கத்தில் குறிச்சி மற்றும் குனியமுத்தூர் 3-ம் நிலை நகராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன. குறிச்சி நகராட்சியில் 1,2,6-வது வார்டுகள் மாநகராட்சியின் 95-வது வார்டாகவும், குனியமுத்தூர் நகராட்சியின் 1,2 மற்றும் 21 வார்டுகள் மாநகராட்சியின் 87-வது வார்டாகவும் மாற்றப்பட்டுள்ளன. இவ்விரு வார்டுகளும் தாழ்த்தப்பட்ட மகளிருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த இரு வார்டுகளையும் பொது வார்டாக மாற்ற வேண்டும் எனக் கோரி தமுமுக, மனிதநேய மக்கள் கட்சி மற்றும் பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் கோரி வந்தன.

கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத் மற்றும் அனைத்து இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவுன்சிலர் தேர்தலைப் புறக்கணிப்பதாக அறிவிக்கப்பட்டது.

95-வது வார்டில் அதிமுக, திமுக, தேமுதிக, காங்கிரஸ், மதிமுக ஆகிய கட்சிகளின் வேட்பாளர்களும், 4 சுயேச்சைகளும் வார்டு உறுப்பினர் பதவிக்குப் போட்டியிடுகின்றனர்.

வாக்குப்பதிவு தொடங்கியதில் இருந்து இப்பகுதி பரபரப்புடன் காணப்பட்டது. 95-வது வார்டுக்கு உள்பட்ட குறிச்சிப்பிரிவு நொய்யல்பாலம் நடுநிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் ஏராளமான வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்றிருந்தனர்.

காலை 9 மணி நிலவரப்படி இப் பள்ளியில் உள்ள ஒரு வாக்குச் சாவடியில் (1035) மேயர் பதவிக்கு 140 பேர் வாக்களித்தனர். ஆனால் கவுன்சிலர்களுக்கு 7 பேர் மட்டுமே வாக்களித்துள்ளனர். 133 பேர் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்று பதிவேட்டில் கையெழுத்திட்டிருந்தனர்.

இதே பள்ளியில் மற்றொரு வாக்குச் சாவடியில் 130 பேர் மேயருக்கு வாக்களித்தனர். கவுன்சிலர்களுக்கு 20 பேர் மட்டுமே வாக்களித்திருந்தனர். எஞ்சிய 110 பேர் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை பதிவு செய்தனர்.

87-வது வார்டு உறுப்பினர் பதவிக்கு அதிமுக, திமுக, மார்க்சிஸ்ட், காங்கிரஸ் மற்றும் இரு சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர். இந்த வார்டுக்கு உட்பட்ட குனியமுத்தூர் அரசு மேல்நிலைப் பள்ளி வாக்குச் சாவடிகளில் காலை 9 மணி நிலவரப்படி சராசரியாக 8 சதவீத வாக்குகள் பதிவாகியிருந்தன.

கவுன்சிலர் தேர்தல் புறக்கணிப்பு குறித்து மனிதநேய மக்கள் கட்சி மாநிலச் செயலர் ஜி. உமர், தமுமுக மாவட்ட செயலர் எச்.அமீது ஆகியோர் கூறியது:

தாழ்த்தப்பட்டோர் வார்டுகள் உருவாக்கப்படுவதை நாங்கள் எதிர்க்கவில்லை. ஆனால், குறிச்சி நகராட்சியில் இருந்து சேர்க்கப்பட்டுள்ள 2 வார்டுகளில் ஏற்கெனவே முஸ்லிம் சமூகத்தினர் உறுப்பினர்களாக இருந்துள்ளனர்.

மூன்றாவதாக ஒரு வார்டை சேர்த்து தனி வார்டாக மாற்றியுள்ளனர். முஸ்லிம் சமூகத்தினரின் பிரதிநிதித்துவம் வரக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த மாற்றம் செய்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர் தேர்தலை புறக்கணிக்கிறோம் என்றனர்.
 
நன்றி; தினமணி 18 Oct 2011

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக