செவ்வாய், 29 மே, 2012

மத்திய அரசு வழங்கிய சிறுபான்மையினருக்கான இடஒதுக்கீட்டிற்கு நீதிமன்றம் தடை.

முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான(ஒ.பி.சி) ஒதுக்கீட்டில் 4.5 சதவீதம் உள் ஒதுக்கீட்டை வழங்கும் மத்திய அரசின் உத்தரவை ஆந்திர மாநில உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்பில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கப்படும் 27 சதவீத இடஒதுக்கீட்டில் சிறுபான்மையினருக்கு 4.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று 2011-ம் ஆண்டில் வழிகாட்டு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்தது.

இதை எதிர்த்து ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தில் பிற்படுத்துப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஆர்.கிருஷ்ணய்யா தொடர்ந்த வழக்கு விசாரணையை தொடர்ந்து இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

நீதிபதிகளான மதன் பி லோகுர்,  சஞ்சய் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு பெஞ்ச் இவ்வழக்கு தொடர்பாக அளித்த தீர்ப்பு:

மதத்தை அடிப்படையாக வைத்து மட்டுமே இந்த இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. வேறு எந்த தெளிவான அம்சமும் பரிசீலிக்கப்படவில்லை. இந்த விஷயத்தை மிகச் சாதாரணமாக மத்திய அரசு கையாளுகிறது.

மதச் சிறுபான்மையினர் அனைவரும் ஒரேவகையான இனக்குழுக்கள் என்பதாகவோ, அவர்கள் சிறப்புச் சலுகை தேவைப்படும் அளவுக்கு மிகவும் பிற்படுத்தப்பட்ட நிலையில் இருக்கிறார்கள் என்பதாகவோ நிரூபிக்கும் எந்தவிதமான ஆதாரத்தையும் மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சமர்ப்பிக்கவில்லை.

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், ஜொராஸ்டிரர்கள் ஆகியோர் ஒரேதன்மை கொண்ட இனக் குழுக்களாக இயங்கவில்லை. அவர்கள் பலவகையான குழுக்களாக இருக்கிறார்கள் என்று நீதிபதிகள் கூறினர்.

உயர் நீதிமன்றத்தின் உத்தரவு, ஐ.ஐ.டி. உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் ஏற்கெனவே நடைபெற்றிருக்கும் மாணவர் சேர்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கிருஷ்ணய்யா சார்பில் நீதிமன்றத்தில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ராமகிருஷ்ண ரெட்டி கூறினார். 

இதற்கிடையில் இந்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யவுள்ளதாக மத்திய அரசு கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக