வியாழன், 2 ஜூன், 2011

தமிழக அரசின் திருமண உதவித்திட்டம்; 'கிடைக்கும் என்பார் கிடைக்காது!

மிழக முதல்வர் ஜெயலலிதா தனது தேர்தல் அறிக்கையில்  கூறியுள்ள திருமண உதவி திட்டத்தை செயல்படுத்தும் வகையில்,  படித்த ஏழைப் பெண்களுக்கு ரூ.25 ஆயிரம் உதவியுடன் தாலிக்கு 4 கிராம் தங்கமும், பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களின் திருமணத்திற்கு ரூ.50 ஆயிரத்துடன், 4 கிராம் தங்கமும் இலவசமாக வழங்கப்படும் என்று பதவியேற்ற நாளிலே முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்தார்.

அவர் அறிவித்த கையோடு தமிழக சமூகநலம், சத்துணவுத் துறை முதன்மைச் செயலர் மோகன் பியாரே மூலம் வெளியிடப்பட்டுள்ள அரசாணையில் புதிய நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
அதில் திருமண உதவி பெறுவதற்கு உரிய தகுதிகளாக அவர் முன் வைத்துள்ளவைகளை பார்க்கும் போது 'வரும் ஆனா வராது' ரேஞ்சில் உள்ளதை காணமுடிகிறது.

''திருமண உதவிகேட்கும் ஏழைப் பெண்களுக்கு, இளநிலை பட்டம் அல்லது டிப்ளமோ பெற்ற பெண்களின் பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.24 ஆயிரத்திற்குள் இருக்க வேண்டும், பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த பெண்ணாக இருந்தால் 5ஆம் வகுப்புவரை படித்திருக்க வேண்டும். மற்ற வகுப்பைச் சேர்ந்த பெண்கள் 10ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே ரூ.25 ஆயிரத்துடன், தாலி செய்வதற்கு 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்கப்படும்'' என்று தமிழக அரசு புதிய நிபந்தனையை விதித்துள்ளது.

திருமண உதவித் தொகை பெற வேண்டுமானால் பெண்ணின் பெற்றோரின் ஆண்டு வருமானம் 24,000 ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும் என்று கூறுகிறது அரசு. இந்த காலத்தில் பெற்றோரின் மாத இரண்டாயிரம் வருமானம் என்பது சாத்தியமா? அரசின் நூறுநாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் கூட நூறு ரூபாய் சுளையாக சம்பளம் கிடைக்கும்  நிலையில் இந்த கணக்குப்படி பார்த்தாலே மாதம் மூவாயிரமாகவும் , ஆண்டு வருமானம்  36,000 ஆகவும் ஆகிவிடுகிறதே. வயற்காட்டில் களை எடுக்கும் ஒரு பெண்ணின் ஒரு நாள் கூலி ரூ.100 முதல் ரூ.130வரை கொடுக்கப்படுகிறது. ஒரு சித்தாளின் சம்பளம் 170  ஆக உள்ளது. அவ்வளவு ஏன் சாதாரண பிச்சைக்காரர்கள் கூட நாள் ஒன்றிற்கு நூறு ரூபாய்க்கும் குறையாமல் சம்பாதிக்கும் நிலையில், பெற்றோரின் மாத வருமானம் 24ஆயிரம் ரூபாய் இருந்தால்தான் திருமண உதவி தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது எந்த வகையில் நியாயம்? அரசின் இந்த அறிவிப்புப்படி பார்த்தால் 99சதவிகித மக்கள் இந்த உதவியை பெறமுடியாது. அல்லது ஆண்டுவருமானத்தை  குறைத்துக்காட்டும்  போலியான சான்றிதழ் வாங்கி அரசை ஏமாற்றினாலே சாத்தியம். அரசு இதை விரும்புகிறதா? எனவே மக்களின் இன்றைய வருவாய்  அடிப்படையில் திட்டங்களுக்கான நிபந்தனை விதிக்க அரசு முன்வரவேண்டும். இல்லையேல் அரசின் நோக்கம் நிறைவேறாததுடன்  மக்களுக்கும் எவ்வித பயனுமில்லாமல் போவதோடு, இடைத்தரகர்களுக்கு வழியை திறந்து விட்டதாகவும் ஆகிவிடும். அரசு கவனிக்குமா?  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக