வெள்ளி, 10 ஜூன், 2011

அழகுக்காக உணவுப்பொருளை வீணாக்குவதா?

க்களில் ஒருசாரார் பசியோடு  வறுமையில் வாடிக்கொண்டிருக்க, டன் கணக்கில் கோதுமை மற்றும் உணவுப்பொருள்களை சேமித்து வைத்த குடோன்களில் வீணாக்கியதால், மத்திய அரசு உச்சநீதிமன்றத்தின் கடும் கண்டனத்திற்கு இலக்கானதை நாம் மறந்திருக்க முடியாது. இதற்கு கராணம் உணவுப் பொருட்களை வீணாக்கினாலும் ஆக்குவோம். ஆனால் மக்களுக்கு கிடைக்கவிட மாட்டோம் என்ற அரசியல்வாதிகளின் அலட்சியம்தான்.

அதே போல்,  ''நம்நாட்டில், 37 சதவீத மக்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்கவில்லை என, அரசு தரப்பில் கூறப்படுகிறது. 50 சதவீதம் பேர், வறுமையின் காரணமாக போதிய சத்து இல்லாமல் உள்ளனர். பொது சொத்து மூலம் கிடைக்கும் வருவாய் மூலம் இவர்களை வாழ வைக்க முடியும். ஆனால், அந்த வாய்ப்பு இவர்களுக்கு கிடைக்காத படி பறிக்கப்பட்டு விடுகிறது என்று மனித உரிமை ஆர்வலர் பினாயக் சென் தெரிவித்துள்ளார்.

நாட்டில் 50  சதவிகிதம் பேர் வறுமையின் காரணமாக போதிய சத்து இல்லாமல் மரணத்தை எத்ர்நோக்கியிருக்க, அத்தகைய ஊட்டச்சத்துக்களை வழங்கும் பழங்களை ஒரு சாரார் வீணாக்குவதை பார்க்கிறோம். இயற்கையாக  விளையும் மாம்பழத்தை  உடனடியாக பழுக்க வைக்கும் நோக்கில், இராசயன கற்கள் மற்றும் ரசாயன பவுடர்கள் தூவி பழுக்க வைப்பதால் அவை பறிமுதல் செய்யப்பட்டு டன் கணக்கில் அழிக்கப்படுகின்றன. ஒரு மாம்பழம் கூட வாங்க வசதியற்ற மக்கள் வாழும் நாட்டில் பணத்தாசையால் சிலர் செய்யும் காரியத்தால் இவ்வாறு பல லட்சம் மாம்பழங்கள் அளிக்கப்படுவது கொடுமைதானே! தனி நபர்கள் தான இத்தகைய காரியங்களில் ஈடுபடுகிறார்கள் என்றால் மறுபக்கம் அரசு சார்ந்த துறையினரும் இது போன்ற வீண் விரையங்களில் ஈடுபடுகின்றனர்.

நீலகிரியில் மே மாதம் முழுக்க நடந்த கோடை விழாவின் இறுதி நிகழ்ச்சியாக, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் கடந்த 28, 29ம் தேதிகளில் பழக் கண்காட்சி நடந்தது. இதில், குன்னூர் தோட்டக்கலைத் துறை சார்பில் 25 ஆயிரம் சாத்துக்குடி பழங்களைக் கொண்டு, நூற்றாண்டு பழமை வாய்ந்த குன்னூர் ரயில் நிலையத்தின்  மாதிரி தோற்றம் வடிவமைக்கப்பட்டிருந்தது. தர்மபுரி தோட்டக்கலைத் துறையினர், ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியின் மாதிரி தோற்றத்தை மாம்பழங்களால் வடிவமைத்திருந்தனர். மதுரை தோட்டக்கலைத் துறையினர் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரத்தை, பல வகை பழங்களைக் கொண்டு அழகுபடுத்தியிருந்தனர். திண்டுக்கல் தோட்டக்கலைத் துறை சார்பில் திராட்சை பழங்களால் கரடியின் தோற்றத்தை உருவாக்கியிருந்தனர். இதற்கு அனைத்து பழங்களையும் கம்பிகளால் கோர்த்து உருவாக்கப்பட்டிருந்தது. இப்பழங்கள் மறுபயன்பாட்டுக்கு பயன்படுத்தப்படுமா என்ற கேள்வி, மக்கள் மத்தியில் எழுந்தது.

இது குறித்து குன்னூர் தோட்டக்கலை உதவி இயக்குனர் மணி கூறியதாவது: குன்னூர் ரயில் நிலையத்தின் தோற்றம், ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி அமைப்பு, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கோபுரம் ஆகியவை பழங்களால் உருவாக்கப்பட்டிருந்தன. இப்பழங்கள் அனைத்தும் ஊசி, கயிறு, கம்பி போன்ற பொருட்களால் குத்தி, உருவாக்கப்பட்டிருந்தது. அந்த பழங்களைக் கொண்டு ஜாம், ஜெல்லி போன்ற பொருட்களை தயாரிக்க முடியாது; கால்நடைகளுக்கும் கொடுக்க முடியாது. எனவே, பழங்கள் அழிக்கப்பட்டு விடும் என்று கூறியுள்ளார்.

அரசுத் துறையின் இந்த செயல்பாட்டின் மூலம் பல லட்சம் மதிப்புள்ள பல லட்சம் பழங்கள் யாருக்கும் பயனின்றி அழிக்கப்படுவது விரையம் தானே. உணவுப் பொருளை கொண்டு கண்காட்சி அமைப்பதாக இருந்தால் அவை மீண்டும் மக்கள் உண்பதற்கு ஏதுவாக அமைக்கவேண்டும். அதை விடுத்து அழகுக்காக லட்சக்கணக்கான பழங்களை வீணாக்குவது எந்த வகை அறிவுடமை என்று அரசு சொல்லவேண்டும். ஆப்பிள் போன்ற பழங்கள் எல்லாம் ஏழைகளுக்கு எட்டாக்கனியாக பணக்காரர்கள் மட்டுமே புசிக்கும் உணவாக மாறிவிட்ட நிலையில், யாருக்கும் பலனின்றி இவ்வளவு பழங்கள் விரயமாக்கப்படுவது சரியா? அரசு விழாக்கள் கூட எளிமையாக நடக்கும் என்று சொன்னதோடு, தனது முதல் பொது நிகழ்ச்சியை எளிமையாக நடத்திக் காட்டி மக்களிடம் நற்பெயரை பெற்றுள்ள முதல்வர், தனது அரசின் துறை சார்ந்தவர்கள்  செய்யும் இதுபோன்ற வீண் விரையங்களை தடுக்க முன்வருவாரா என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

''ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு மஸ்ஜிதிலும் தொழுங்காலம் உங்களை ஆடைகளால் அழகாக்கிக் கொள்ளுங்கள்; உண்ணுங்கள், பருகுங்கள்; எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை.[7:31 ]


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக