வியாழன், 26 ஏப்ரல், 2012

ஸ்டாலினின் மதுரைப் பயணம்; ஆட்டம் காணும் அழகிரியின் ராஜ்ஜியம்..?

ந்திய நாட்டின் தலைநகருக்கு மகளான கனிமொழியையும், தமிழகத்தின் தலைநகருக்கு மகனான ஸ்டாலினையும், தமிழகத்தின் மத்தியத் தலைநகராம் மல்லிகை மணக்கும் மதுரையில் மற்றொரு மகனான அழகிரியையும் அதிகார பீடத்தில் வைத்து அழகு பார்த்தார் திமுக தலைவர் கருணாநிதி. இவர்களில் அழகிரிக்கும் ஸ்டாலினுக்கும் எக்கசக்க பிரியம் இருப்பதாக காட்டிக்கொண்டாலும், கருவாட்டு நாற்றத்தை போர்வை போட்டு மூடி மறைத்து விடமுடியாது என்பதைப் போல், இவ்விருவரின் பனிப்போரும் பட்டவர்த்தனமாக அவ்வப்போது பத்திரிக்கைகளில் பதிவாகிவிடுகின்றது. மதுரைக்கு திமுக தலைவரே செல்லவேண்டும் என்றாலும் அழகிரியின் கண்னசைவின்றி மதுரை எல்லைக்குள் நுழையமுடியாது என்று கூறப்படும் அளவுக்கு தென்மாவட்டத்தின் ஏகபோக அதிகார மையமாக திகழ்ந்தார் அழகிரி. தென் மண்டல அமைப்புச் செயலாளராக கட்சியில் முடிசூடிய அழகிரி, தென் மாவட்ட முக்கிய கட்சிப் பிரமுகர்கள் தொடங்கி, முன்னால் அமைச்சர்கள் வரை தனது கட்டளைக்கு கீழ் செயல்படும் வகையில் பார்த்துக் கொண்டார். 

இந்நிலையில் கட்சித் தலைவர் பதவி தந்தால் ஏற்றுக் கொள்வேன் என்று அழகிரி வெளிப்படையாக சொல்லியும் கூட, கட்சி அவருக்கு மாநில அரசியலில் முக்கிய பதவியை வழங்காமல், மத்திய அமைச்சராக்கி டெல்லிக்கு விரட்டியது. இதில் கருணாநிதியின் வாரிசுகளில் முதல் மத்திய அமைச்சர் என்ற அந்தஸ்து கிடைத்தாலும், மாநில அதிகாரத்தில் ஸ்டாலினுக்கு போட்டியாக அழகிரி உருவாகிவிடக் கூடாது என்பதற்காகவே அவரை டெல்லிக்கு தள்ளி விட்டதாக அரசியல் அரங்கில் பேசப்பட்டது. இதை உண்மைப்படுத்தும் வகையில் அழகிரியும் தான் ஏற்றுக்கொண்ட மத்திய அமைச்சர் பதவியில் ஈடுபாடு காட்டாமலும், நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பெரும்பாலும் பங்கேற்காமலும் காலம் கடத்தி வருகிறார். 

இது ஒருபுறமிருக்க, திமுக பொருளாளரும், இளைஞரணிச் செயலருமான ஸ்டாலின், மதுரை மாநகர் மாவட்ட மற்றும் புறநகர் மாவட்ட இளைஞரணி நிர்வாகிகளைத் தேர்வு செய்வதற்கான நேர்காணலை ஏப்ரல் 14, 15-ம் தேதிகளில் நடத்தினார். ஏப்ரல் 15-ம் தேதி தமிழக அரசைக் கண்டித்து நடந்த பொதுக் கூட்டத்திலும் அவர் பேசினார். இந்த நிகழ்ச்சிகளை அழகிரியின் ஆதரவாளர்கள் புறக்கணித்துவிட்டனர்.

இளைஞரணி நேர்காணலுக்கான அழைப்பிதழில் அழகிரியின் பெயர் இடம் பெறவில்லை, பொதுக்கூட்டம் குறித்து அவரிடம் ஆலோசனை நடத்தவில்லை எனக் கூறி ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சிகளை அழகிரியின் ஆதரவாளர்கள் புறக்கணித்தனர். அழகிரி கூறியதால்தான் அவரது ஆதரவாளர்கள் நிகழ்ச்சிகளைப் புறக்கணித்ததாகவும் கூறப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஸ்டாலின் நிகழ்ச்சிகளைப் புறக்கணித்த மதுரை மாநகர் மாவட்ட நிர்வாகிகள் 17 பேருக்கு விளக்கம் கேட்டு கட்சி மேலிடம் நோட்டீஸ் அனுப்பியது. அவர்களில் சிலர் விளக்கம் அளித்து தலைமைக்கு கடிதங்கள் அனுப்பினர். இந்நிலையில் அழகிரியின் நம்பிக்கைக்கு பாத்திரமான மதுரை இசக்கி முத்து கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார்.

இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய அழகிரி, 'திமுகவில் இவ்வாறு நீக்குவது சாதரணமான ஒன்றுதான். இதுபற்றி கேள்வி எழுப்பும் நீங்கள் தினமும் அதிமுகவில் நீக்கப்படுபவர்கள் பற்றி கேட்டதுண்டா? என்று நிருபர்களை மடக்கினாரே தவிர, உருப்படியான பதிலைச் சொல்லவில்லை.

மேலும், தனது ஆதரவாளர்கள் ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கு கொள்ளாதது பற்றி முன்பு இதே அழகிரி, யார் வந்தாலும் நிர்வாகிகள் வரவேற்கவேண்டும் என்று அவசியமில்லை என்று கூறியிருந்தார். 

கட்சியின் மாநிலப் பொருளாளரும், இளைஞர் அணிச் செயலாளரும், முன்னாள் துணை முதல்வரும், மு.கருணாநிதியின் மகனுமான ஸ்டாலின் நிகழ்ச்சியில் பங்கேற்காதது தவறுதான் , எங்கள் அண்ணன் அழகிரியை அவர்கள் அவமதித்தது தான் எங்கள் புறக்கணிப்புக் காரணம் என்று நோட்டீஸ் அனுப்பப்படுள்ள சிலரே ஒப்புக்கொண்ட நிலையில், ஒரு முக்கிய நிர்வாகி வந்தால் கூட அவரை வரவேற்க வேண்டும் என்று அவசியமில்லை என்று அழகிரி சொல்லியுள்ளது ஸ்டாலினுக்கு நெத்தியடிதான். 

இப்படி மல்லிகை நகராம் மதுரையில் ஸ்டாலினுக்கு எதிராக ஒரு புயல் வீசி வரும் நிலையில், மாங்கனி நகராம் சேலத்தில் வீரபாண்டியார் ஒருபக்கம் ஸ்டாலினுக்கு எதிராக கொடி பிடிக்கிறார். ஸ்டாலின் நேரடியாக தேர்வு செய்த இளைஞர் அணி நிர்வாகிகளில் அதிமுக உறுப்பினர்கள் சிலர் அங்கம் வகிப்பதாக அசகாய குண்டை வீசியுள்ளார். ஏற்கனவே கட்சியின் மாநிலப் பொதுக்குழுவில் வீரபாண்டியாருக்கு எதிராக வீறு கொண்டு எழுந்து கூச்சல் போட்டனர் ஸ்டாலின் ஆதரவாளர்கள் என்பது வாசகர்களுக்கு நினைவிருக்கலாம். அதற்கு முன்பு ஸ்டாலினுக்கு எதிராக பாய்ச்சல் காட்டிய பரிதி இளம்வழுதி பம்மியிருக்கிறார். ஆக திமுகவின் வாரிசுரிமைப் போர் தொடங்கிவிட்டது. இதில் ஜெயிக்கப்போவது யார்? என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக