வியாழன், 12 மே, 2011

அமெரிக்காவின் அடிச்சுவட்டில் முதல்வரின் அறிக்கை?

மெரிக்க அதிரடிப் படையால் உஸாமா பின் லாதின் கொல்லப்பட்டதாக கூறப்பட்டதையொட்டி முதல்வர்  கருணாநிதி அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். அதை படிக்கும்போது ஒபாமா எழுதிக் கொடுத்த அறிக்கையை இவர் கையெழுத்திட்டு வெளியிட்டு விட்டாரோ  என எண்ணத் தோன்றும் அளவுக்கு அதில் உள்ள அம்சங்கள் அமைந்துள்ளன.
 
சின்னஞ்சிறு குழந்தையும் உஸாமா கொல்லப்பட்ட விஷயத்தில் அமெரிக்காவின் கூற்றை சந்தேகம் கொண்டு பார்க்கும் நிலையில்,  ''ஒசாமா பின்லேடன் எனும் உசாமா பின் முகமது பின் அவாத் பின் லாடின் இன்று இல்லை. ஆம்; 40 நிமிடங்களில் அவரது கதை முடிந்து விட்டது. அமெரிக்கப் படையினரால் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார் என்று ஆணித்தரமாக கூறுகிறார் முதல்வர். முதல்வர்  ஒருவரை உயிருடனோ, பிணமாகவோ பிடித்து வருமாறு  தனது அதிகாரத்திற்குடபட்ட காவல்துறைக்கு உத்தரவிடுகிறார். அந்த காவல்துறை அதிகாரி சிறிது நேரத்தில் முதல்வரிடம் வந்து,
அய்யா! நீங்கள் சொன்ன அந்த ஆளின் கதையை முடித்து விட்டேன் என்கிறார். உடனே முதல்வர் 'எங்கய்யா அந்த ஆளோட புகைப்படத்தை என்கிறார்.  
அந்த அதிகாரி, அய்யா! அந்த புகைப்படம் ரெம்ப கோரமாக இருக்குது. அதனால் உங்களிடம் காட்டமாட்டேன் என்கிறார்.
எங்கய்யா பிணத்தை என்று கேட்கிறார் முதல்வர். அய்யா! அவனது மதப்படி 24 மணிநேரத்துல புதைக்கணும்; அதுனால நான் மெரீனா கடலுக்குள்ள தூக்கி போட்டுட்டேன் என்கிறார். இப்படி ஒரு அதிகாரி முதல்வரிடம் சொன்னால், அதை முதல்வர் ஏற்று, நீ அந்த ஆளை கொன்றது உண்மைதான் என்று ஏற்றுக் கொள்வரா? அப்படி ஏற்றுக் கொள்வதுதான் ஆளுமைத் திறனா என்று கேட்கத் தோன்றுகிறது.
 
மேலும் ''சவுதி அரேபிய அரசு அவருக்குத் தடை விதிக்கவே, சூடானில் அடைக்கலம் புகுந்தார் பின்லேடன். நைரோபி, கென்யா, தான்சானியா உள்பட பல இடங்களில் உள்ள அமெரிக்கத் தூதரகங்களிலும், அமெரிக்காவிலும் 'அல் கய்தா''அமைப்பு குண்டு வெடிப்பை நடத்தியது. சூடானில் இருந்தும் நாடு கடத்தப்பட்ட பின்லேடன், ஆப்கானிஸ்தானில் தஞ்சம் அடைந்து, அமெரிக்காவுக்கு எதிராகப் புனிதப்போர் என அறிவித்தார் எகிறார் முதல்வர்.''
 
முதல்வர் உஸாமாவின் வரலாற்றை  இன்னும் கொஞ்சம் புரட்டுவது நன்று. உஸாமா ஆப்கான் வந்ததற்கு பிரதான  காரணம் ஆப்கானை ஆக்கிரமித்திருந்த சோவியத் படைகளை விரட்டவே என்பதை முதல்வர் அறியவில்லையா? சோவியத் படை விரட்டப்பட்ட பின் அங்கே தாலிபான்கள் தலைமையில் ஒரு ஆட்சியை உஸாமா உருவாக்கி நடத்திவரும் வேளையில், தலிபான்களின் ஆட்சியில் இஸ்லாமிய அடிப்பையிலான சில சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதை  கண்ட அமெரிக்கா, எங்கே ஒரு முழுமையான  இஸ்லாமிய அடிப்படையிலான ஆட்சியாக ஆப்கான் அரசு மாறிவிடுமோ என்ற குறுகிய சிந்தனையின் வெளிப்பாடுதான் இரட்டைக் கோபுர தாக்குதலும் அதையொட்டிய ஆப்கான் மீதான ஆக்கிரமிப்பு போரும் என்பதும் முதல்வர் அறியாதது ஆச்சர்யமே.
 
அடுத்து அமெரிக்காவின் இரட்டைக் கோபுர தாக்குதலுக்கு காரணம் உசாமாதான் என்பதற்கான ஆதாரத்தை அமெரிக்காவே இன்றுவரை சமர்ப்பிக்காமல் வெற்று செய்திகளின் மூலம் ஆப்கான் மீது போர் தொடுத்த நிலையில், ''நியூயார்க் நகரில் உள்ள 111 மாடிகள் கொண்ட இரட்டை கோபுரக் கட்டிடம் பின்லேடனின் சதித்திட்டத்தால் தகர்த்தெறியப்பட்டது'' என்று திட்டவட்டமாக முதல்வர் கூறுகிறார். அமெரிக்க எல்லைக்குள் அந்நிய நாட்டு எறும்பு ஊர்ந்தாலும் அது எங்கள்  கண்களுக்கு தெரியாமல் போகாது என மார்தட்டும் அமெரிக்காவில் புகுந்து அந்த நாட்டு விமானங்களையே கடத்தி இந்த தாக்குதல் தொடுப்பது சாத்தியமே என்கிறாரா  முதல்வர்? அதுவும் அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பெண்டகனை தாக்கும் அளவுக்கு உஸாமா வலிமையானவர் என்றும், அமெரிக்கா பலவீனமான நாடு என்றும் முதல்வர் ஒப்புக்கொள்வாரா?  
 
அடுத்து, உஸாமா கொல்லப்பட்டதை  உலக நாடுகளில் பெரும்பாலானவை மகிழ்ச்சியுடன் வரவேற்றுள்ளன என்கிறார் முதல்வர். உலகத்தில் உள்ள எந்தனை நாடுகள் உஸாமா கொல்லப்பட்டதை  வரவேற்றன? அமெரிக்காவின் நேச நாடுகளும், அமெரிக்காவின் நட்பு பேணும் சில  முஸ்லிம் நாடுகளும் வரவேற்று உள்ளன. இவர்கள்தான் முதல்வர் பார்வையில் பெரும்பான்மை நாடுகளா?  
 
''வரலாறு தனது வரிகளை இரத்தத்தால் தவிர வேறு எதனாலும் எழுதுவதில்லை. புகழ் எனும் உயர்ந்த மாளிகை மண்டை ஓடுகளால் தவிர வேறு எதனாலும் கட்டப்படுவதில்லை. கவுரவத்திற்கும், மதிப்பிற்கும், உடைந்த எலும்புகளாலும், பிணங்களாலும் தவிர வேறு எதனைக் கொண்டும் அடித்தளம் இடப்படுவதில்லை'' என்று பின்லேடனின் ஆசிரியர் தந்த போதனையை அப்படியே உணர்ச்சிப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு, அதை நிலைநிறுத்துவதற்கு வாழ்நாள் முழுவதும் முயற்சி செய்த ஒசாமா பின்லேடன், தன் கையில் எடுத்த கருவிதான் ''பயங்கரவாதம்'' என்கிறார் முதல்வர். ஒசாமாவிற்கு இத்தகைய துர்போதனை செய்த ஆசிரியர் யார் என்றோ, அவரை பற்றிய குறிப்பையோ மறந்தும் கூட முதல்வர் சொல்லவில்லை என்பது ஆச்சர்யமே. 
 
''கத்தியைக் கையில் எடுத்தவன்; கத்தியாலேயே அழிவான்'' என்பது பழமொழி. அந்த பழமொழிக்கான பாடம்தான் ஒசாமா பின்லேடனின் வாழ்க்கை என்றும் கூறுகிறார் முதல்வர். ஒரு அமெரிக்க எதிர்ப்பாளரை அதுவும் ஈராக் நாட்டின் மீது இருமுறை படையெடுத்து பல்லாயிரம் அப்பாவிகளை கொன்று குவித்த அமெரிக்காவை எதிர்க்க, பாலஸ்தீன மக்களை கொல்லும் இஸ்ரேலுக்கு பக்கபலமாக இருக்கும் அமெரிக்காவை எதிர்க்க நிராயுதபாணியாய் ஆக்கப்பட்ட  முஸ்லிம்களுக்கு ஆதரவாக இறங்குவதுதான் பயங்கரவாதமா? உஸாமாவின் தாக்குதல்கள் என்று கூறப்படுபவை அனைத்தும் அமெரிக்காவிற்கு எதிரானவையேயன்றி  ஒட்டுமொத்த உலகத்திற்கும் எதிரானவை அல்ல என்பதை ஊன்றி கவனித்தால் உண்மை விளங்கும். பாதிக்கப்பட்ட மக்களுக்கு பக்கபலமாக  நிற்பதுதான் சர்வதேச தீவிரவாதம் என்றால் முதல்வர் ஆதரிக்கும் புலிகள் எந்தவகையை சேர்ந்தவர்கள் என்பதை முதல்வர் கூறுவாரா? உஸாமா அமெரிக்காவால் சுட்டுக் கொல்லப்பட்டதால் கத்தியால் வந்த வினை என்றால் பிரபாகரன் இலங்கை ராணுவத்தால் கொல்லப் பட்டதையும் இவ்வாறே கூறுவாரா முதல்வர்?
 
இறுதியாக அமெரிக்கா தனக்கு தேவைஎன்றால் ஒருவரை ஊட்டச்சத்து கொடுத்து  உருவாக்கும்; தனக்கு தேவைஇல்லைஎன்றால் அவரையே தீவிரவாதியாக உலகுக்கு அடையாளம் காட்டி கதையை முடிக்கும் என்பதற்கு சதாம்களும், உசாமாக்களும் உதாரணமாக திகழ்கிறார்கள். எனவே, ஒருவருக்கோ அல்லது ஒரு அமைப்பிற்கோ, ஒரு நாட்டிற்கோ தீவிரவாத சான்றிதழ் அமெரிக்கா வழங்கிவிட்டால் அதுதான் உண்மை என நம்புவது பகுத்தறிவு பாதையில் வந்ததாக கூறிக்கொள்ளும் முதல்வருக்கு அழகா என்பதை அவரே தீர்மானிக்கட்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக