வியாழன், 12 மே, 2011

மதானி வலையில் சிக்க மறுக்கும் 'ஜாமீன்'

'நானும் எல்லா மீண் மார்க்கெட்டிலயும்  விசாரிச்சுட்டேன். நெத்திலி மீனு இருக்குன்றான்; நெய் மீனு இருக்குன்றான்; வஞ்சிரம் மீனு இருக்குன்றான்; வாலை மீனு இருக்கின்றான் ஆனால் 'ஜாமீன்' மட்டும் இல்லன்னே என்று வரும் ஒரு காமெடி காட்சி போல யார் யாருக்கோ கிடைக்கும் ஜாமீன் மதானிக்கு மட்டும் வலையில் சிக்க மறுக்கிறது.
 
பத்தாண்டுகால சிறைவாசத்திற்கு பின் குற்றமற்றவராக கோவை சிறை மீண்ட மதானியை லபக்கென பிடித்து நீதிமன்றக் காவலில்  வைத்தது கர்நாடக பாஜக அரசு. பெங்களூர் தொடர் குண்டுவெடிப்பு மற்றும் சூரத், ஆமதாபாத், ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு சம்பவங்களில் குற்றம்சுமத்தப்பட்டுள்ள மதானி, தனது உடல்நிலையை காரணம் காட்டி ஜாமீன் அளிக்கக் கோரி கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை கடந்த பிப்ரவரியில் விசாரித்த உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்தது. மதானிக்கு தேவையான மருத்துவ சிகிச்சையை அளிக்குமாறு சிறை நிர்வாகத்துக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து மதானி ஜாமீன் கோரி, உச்ச நீதிமன்றத்தை அணுகினார். அவரது மனு 4 -5 -11 புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. இதை நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு, ஞான சுதா மிஸ்ரா ஆகியோர் விசாரித்தனர். மதானி சார்பில் மூத்த வழக்கறிஞர் சாந்தி பூஷணும், கர்நாடக அரசு சார்பில் வழக்கறிஞர் அந்தியர்ஜுனாவும் ஆஜராகி வாதிட்டனர்.

"மதானி, கேரளத்தில் பிரபலமான அரசியல் தலைவர். அவர் ஒரு மனித உரிமை ஆர்வலரும்கூட. அவர் மீதான கர்நாடக அரசின் குற்றச்சாட்டுகள் பொய்யானவை. அவர் மீதான குற்றச்சாட்டுகள் அரசியல், வகுப்பு உள்நோக்கமுடையது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.' என்று சாந்தி பூஷண் வாதிட்டார்.

கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞர் அந்தியர்ஜுனா இதை கடுமையாக எதிர்த்தார். "மதானிக்கு பல்வேறு குண்டு வெடிப்பு சம்பவங்களுடன் தொடர்பிருக்கிறது. இதற்கு உரிய ஆதாரங்கள் உள்ளன. அவருக்கு ஜாமீன் அளிப்பது மாநில, தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது' என்று கூறினார்.

இந்நிலையில் இருதரப்பு வாதத்தையும் கேட்டறிந்த நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு, மதானி மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை. அவருக்கு ஜாமீன் வழங்கினால் தேசத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறுவது ஏற்புடையதாக இல்லை. விநாயக் சென்னுக்கு செஷன்ஸ் நீதிமன்றம், உயர் நீதிமன்றம் ஜாமீன் மறுத்த நிலையில் அவருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இதனால் மதானிக்கு ஜாமீன் வழங்குவதில் தவறு இல்லை என்றே கருதுகிறேன்' என்றார்.

நீதிபதி மார்க்கண்டேய கட்ஜுவின் இந்தக் கருத்துக்கு வழக்கறிஞர் அந்தியர்ஜுனா கடும் எதிர்ப்பு தெரிவித்தார். "விநாயக் சென்னுடன் மதானியை எவ்விதத்திலும் ஒப்பிட முடியாது. இருவர் மீதான வழக்குகளும் முற்றிலும் மாறுபட்டவை. விநாயக் சென்னுக்கு இந்த நீதிமன்றம் ஜாமீன் வழங்கியபோது நாம் அனைவரும் மகிழ்ச்சியும், பெருமையும் அடைந்தோம். ஆனால் மதானிக்கு ஜாமீன் அளித்தால் மகிழ்ச்சியோ, பெருமையோ அடைய முடியாது. ஏனென்றால் 100-க்கு மேற்பட்டவர்கள் கொல்லப்பட்ட வழக்கில் குற்றம்சுமத்தப்பட்டுள்ளவர் அவர். இதனால் அவருக்கு எக்காரணத்தை முன்னிட்டும் ஜாமீன் வழங்கக்கூடாது' என்றார்.

மார்க்கண்டேய கட்ஜுவின் கருத்தை நீதிபதி ஞான சுதா மிஸ்ராவும் ஏற்கவில்லை. அவரும் எதிர்ப்பு தெரிவித்தார். மதானி மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரத்தை அளித்துள்ளது கார்நாடக அரசு. இதில் அவருக்கும் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கும் தொடர்பிருப்பதற்கான ஆதாரமும் அடங்கும். அவருக்கு ஜாமீன் அளித்தால் தேசப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பது ஏற்புடையதுதான். இதனால் அவருக்கு ஜாமீன் வழங்குவது சரியான முடிவாக இருக்காது என்றே கருதுகிறேன்' என்றார்.

இவ்வாறு மதானிக்கு ஜாமீன் வழங்குவதில் நீதிபதிகளிடையே ஒருமித்தக் கருத்து ஏற்படவில்லை. இதனால் இருவரும் ஜாமீன் மனுவை வேறொரு பெஞ்சின் விசாரணைக்கு உட்படுத்துமாறு தலைமை நீதிபதி கபாடியாவுக்கு பரிந்துரைத்ததாக செய்திகள் கூறுகின்றன. மதானியின் இந்த வழக்கு விசயத்தில் அவருக்கு ஜாமீன் மறுப்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை.
ஏனெனில் கர்நாடக அரசு கூறும் குற்றச்சாட்டுகளில் மதானி ஜாமீன் மறுக்கப்படும் அளவுக்கு முதல் குற்றவாளியல்ல. அவர் 28 வது குற்றவாளியே. மேலும் நூற்றிற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட வழக்கில் சம்மந்தப்பட்டவர்களுக்கு இதுவரை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதே இல்லையா? மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் கைதாகி  6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய் தத்தை உயர்நீதிமன்றம் ஜாமீனில் விடுவிக்கவில்லையா? ஒரு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு தண்டனை பெற்றவருக்கே ஜாமீன் வழங்கியிருக்கும்போது, வெறுமனே குற்றம் சாட்டப்பட்டுள்ள  கைதியாக உள்ள மதானிக்கு ஜாமீன் மறுப்பது எந்தவகை நியாயம்? மேலும் அவருக்கும் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கும் தொடர்பிருப்பதற்கான ஆதாரம் கர்நாடக அரசால் வழங்கப்பட்டிருப்பதாக கூறுகிறார்  நீதிபதி ஞான சுதா மிஸ்ரா. நீதிபதியின் கூற்றை சரியென்றே கொண்டாலும் தடை செய்யப்பட்ட அமைப்புகள் விசயத்தில் உச்சநீதிமன்றத்தின் நிலை  என்ன? "தடை செய்யப்பட்ட இயக்கத்துக்கு ஆதரவாக போராட்டம் நடத்துவதோ, பிரச்சாரம் செய்வதோ குற்றமாகாது என்று வைகோ மீதான பொடா வழக்கில் உச்சநீதி மன்றமே தீர்ப்பளித்துள்ளது. அவ்வாறிருக்க வெறுமனே தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் மதானிக்கு தொடர்பு என்ற காரணம்  காட்டி, தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என கதை கட்டி  ஜாமீன் மறுப்பது எந்தவகை நீதி? நீதிமான்களுக்கே வெளிச்சம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக