வியாழன், 5 மே, 2011

உண்மையின் உரைகல்லா? உண்மையை ஊனமாகும் உளியா?

குஜராத் முஸ்லிம் இனப் படுகொலையில், மோடியின் கரம் கறைபடிந்துள்ளது என்பதற்கு பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு சான்றுகள் வெளியாகியுள்ளன. அந்த வரிசையில்,  குஜராத் கலவரம் நடந்த போது அங்கு மூத்த ஐ.பி.எஸ். போலீஸ் அதிகாரியாக இருந்தவரும், தற்போது உளவுத் துறையில் பணியில் இருப்பவருமான  சஞ்சீவ் பட் சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில்,''குஜராத் கலவரத்துக்கும், முதல்மந்திரி நரேந்திர மோடிக்கும் தொடர்பு உண்டு. கலவரம் நடந்த போது நான் அங்கு பணியாற்றினேன். அப்போது நரேந்திரமோடி, தனது வீட்டில் போலீஸ் உயர் அதிகாரிகளின் கூட்டத்தை கூட்டினார்.இந்த கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி, குஜராத்தில் நடந்து வரும் கலவரத்தை கண்டு கொள்ள வேண்டாம். இந்துக்கள் தங்கள் கோபத்தை தீர்த்துக்கொள்ளட்டும். அதற்கு அனுமதியுங்கள். கலவரத்தால் பாதிக்கப்படுவோருக்கு ஆதரவாக செயல்பட வேண்டாம். அவர்களது கூக்குரலை கேட்க வேண்டாம் என்று சொன்னார் என குறிப்பிட்டிருந்தார்.

இவரது இந்த அதிரடி அபிடவிட் மோடியின் முகத்திரையையும், புலனாய்வுத் துறையின் முகத்திரையையும் ஒரு சேரக் கிழித்தது. இதை மோடி கூட தாங்கிக் கொண்டார். ஆனால் மோடியின் ஊதுகுழலான தினமலருக்கு தாங்க முடியவில்லை போலும். இப்படி கிண்டலடித்திருக்கிறது.

குஜராத் போலீஸ் அதிகாரி சஞ்சீவ் பட்: கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்தால், இந்துக்களிடையே கொந்தளிப்பான சூழ்நிலை நிலவுகிறது. இத்தகைய சம்பவம் இனி நிகழாதவாறு, முஸ்லிம்களுக்கு பாடம் கற்பிக்க நினைக்கின்றனர். அவர்களது கோபத்துக்கு தடை விதிக்காமல், கண்டும், காணாமல் இருக்கும்படி போலீஸ் அதிகாரிகளிடம் நரேந்திர மோடி கூறினார்.

டவுட் தனபாலு: இன்னும் பெட்டரா எதிர்பார்க்கிறேன்... "எல்லா போலீஸ்காரங்க கையிலயும் துப்பாக்கியைக் கொடுத்து, முஸ்லிம்களை எங்கே பார்த்தாலும் சுட்டுக்கொல்லச் சொன்னாரு'ன்னு சொல்லுங்க... வாய்க்கு வந்தபடி சொல்றதுன்னு ஆகிப்போச்சு... எவ்ளோ சொன்னா என்ன...?

என்கிறது தினமலர். அதாவது அந்த அதிகாரி வாய்க்கு வந்தபடி சொல்கிறாராம். வருத்தப்படுகிறது தினமலர். அந்த அதிகாரி தாக்கல் செய்துள்ள மனுவில் மோடி குறித்து சொன்னவைகள் உண்மையா? அல்லது பொய்யா? என்று ஆராய்வதற்கு நீதிமன்றம் இருக்கிறது. அதற்குள் அந்த அதிகாரியை பொய் சொல்பவராக வாய்க்கு வந்தபடி தினமலர் எழுதவேண்டிய அவசியம் என்ன? இதற்கு வயிற்றெரிச்சல் தவிர வேறென்ன காரணமிருக்க  முடியும்?  அடுத்து இதே போன்று மோடி மீது குற்றம் சாட்டிய இன்னொருவரையும் சாடியுள்ளது தினமலர். அதை கீழே படியுங்கள்;

நில மோசடி வழக்கில் சிக்கி, தற்போது சிறையில் உள்ள பிரதீப் சர்மா: குஜராத் கலவரம் நடந்தபோது, நான், ஜாம்நகர் நகராட்சி கமிஷனராக இருந்தேன். என் சகோதரர் குல்தீப் சர்மா, போலீஸ் அதிகாரியாக பணியாற்றினார். அப்போது, முதல்வர் மோடி அலுவலகத்தில் இருந்து, ஓர் அதிகாரி என்னை தொடர்பு கொண்டு, "கலவரக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டாம்' என, சகோதரரிடம் தெரிவிக்கும்படி கூறினார்.

டவுட் தனபாலு: மோசடி வழக்கு தொடர்பா சிறையில இருக்கற ஆட்கள் எல்லாம் மோடி மேல குற்றம் சொல்ற அளவுக்கு நிலைமை போயிடுச்சு, பாருங்க... உள்துறை அமைச்சரான அண்ணன் சிதம்பரம், இவருக்கும் ஒரு பாராட்டு தெரிவிச்சா, தேவலை...! என்கிறது தினமலர்.

மோசடி வழக்குல சம்மந்தப்பட்ட ஒருத்தர் சொல்ற எல்லாமே பொய்யாகிவிடுமா? அல்லது மோசடி வழக்குல சம்மந்தப்பட்டவர்களின் சாட்சியம் வேறு வழக்குகளில் ஏற்கப்படாது என்று ஏதேனும் சட்டமிருக்கிறதா? தினமலர் சொன்னால்  நன்றாக இருக்கும். அதோடு உள்துறை அமைச்சர் சிதம்பரத்தையும் சந்தடி சாக்கில் சாடியுள்ளது தினமலர். மோடி அப்பழுக்கற்றவர் என்று தினமலர் நம்பினால் அது அதன் சொந்த விருப்பம். அதற்காக தான் தூய்மையாளர் என்று நம்புபவரை எவரும் குற்றம் சாட்டக்கூடாது என்ற கோணத்தில் எல்லோர் மீதும் விழுந்து பிராண்டுவது ஒரு பத்திரிக்கைக்கு அழகல்ல. யார்  குற்றவாளி; யார் வாக்குமூலம் உண்மையானது என்பதை  ஆய்வு செய்யத்தான் நீதிமன்றம் உள்ளது. நீதிமன்றத்தின் வேலையை தினமலர் செய்யாமல் இருப்பதுதான் அதற்கு  நல்லது. 
உண்மையின் உரை கல் என்று தன்னை தானே புகழ்ந்து கொள்ளும் தினமலர், மற்றவர்களின் உண்மைக் குரலை  ஊனமாக்க முயல்வது சரியன்று.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக