செவ்வாய், 24 மே, 2011

மானம் போச்சு; மாம்பழமும் போகுமா?

மிழகத்தில் வன்னியர் சங்கம் என்ற சாதி அமைப்பின் மூலம் 1980 வாக்கில் தனது பொதுவாழ்க்கையை தொடங்கிய மருத்துவர்  ராமதாஸ், வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு என்ற கோஷத்தை முன்வைத்தார். தனது இனத்திற்கு இடஒதுகீட்டை பெறுவதற்காக மரத்தை வெட்டி சாலையை மறிப்பது போன்ற அதிரடி நடவடிக்கையால் அரசுக்கு தலைவலியை உண்டாக்குபவராகவும், அந்த சமூக மக்களுக்கு ஆபத்து பாந்தவனகவும் அடையாளப்படுத்திக்  கொண்டார்.  
 
எல்லோருக்கும் வரும் அரசியல் ஆசை  இவருக்கும் வந்தது. வன்னியர் சங்கத்தை பெயரளவுக்கு வைத்துக் கொண்டு பாட்டாளி மக்கள் கட்சியை தொடங்கி நிறுவனராக கோலோச்சினார். ஆரம்பத்தில் தனிக்கடை விரித்து போனி ஆகாததால் அடுத்தடுத்த தேர்தலில் அணி சேரத் தொடங்கினார். அதோடு கூட்டணி சேர்வதில் அரசியல் கட்சிகளுக்கு பாடம் நடத்தும் அளவுக்கு ஒவ்வொரு தேர்தலுக்கும் ஒவ்வொரு  இடத்தை மாற்றினார். இவ்வாறான இவரது பா.ம.க ஏறுமுகத்தில் பயணிக்க தொடங்கி, மாநிலத்தையும் தாண்டி மத்தியிலும் அங்கம் வகிக்கும் அளவுக்கு தேர்ச்சி பெற்றது. 
 
பா.ம.க சாதிகட்சியல்ல என்று சொல்லி முஸ்லிம்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் உழைப்பையும் வாக்குகளையும்  அள்ளிய ராமதாஸ், உப்புச்சப்பில்லாத கட்சி பதவி நீங்கலாக  சட்டமன்ற, நாடாளுமன்ற வேட்பாளர்களாக  இவரது கட்சி மூலம் முஸ்லிம்களைநிறுத்தாமல் கவனமுடன் பார்த்துக் கொண்டார். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 30  தொகுதிகளை திமுகவில் பெற்ற ராமதாஸ் மருந்துக்குக் கூட ஒரு முஸ்லிமை வேட்பாளராக்கவில்லை. இவரது இந்த முஸ்லிம் விரோத போக்கிற்கு முஸ்லிம்கள் மட்டுமன்றி பெரும்பான்மை வாக்காளர்கள் சம்மட்டி அடி கொடுத்ததன் மூலம் வெறும் மூன்று இடங்களில் வெற்றி பெற்று முச்சந்தியில் நிற்கிறார். இவருக்கு அடுத்த சோதனையாக முகவரியும் போகும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆம்! தேர்தல் தோல்வியால் பா.ம.க. மாநில கட்சி அங்கீகாரத்தை இழக்கிறது.  
 
ஒரு கட்சி அங்கீகாரம் பெற வேண்டும் என்றால் மொத்தம் பதிவான ஓட்டில் 6 சதவீதம் ஓட்டுகள் பெற்று இருக்க வேண்டும். சட்டசபை தேர்தலில் பா.ம.க.வுக்கு மொத்தம் 19 லட்சத்து 27 ஆயிரத்து 783 ஓட்டுகள் கிடைத்தது. இது 5.23 சதவீதம் ஆகும்.  இதன் மூலம் தேர்தல் கமிஷனின் விதிகளை அக்கட்சி எட்டவில்லை.   இதன் காரணமாக பா.ம.க. மாநில கட்சி அங்கீகாரத்தை இழக்கிறது. மாநிலக் கட்சி அந்தஸ்தை இழந்துவிடுமாயின் அதிகாரப்பூர்வ சின்னமும் அதாவது மாம்பழமும் போய்விடும் என்று செய்திகள் கூறுகின்றன.ஆனால் தங்களது கட்சிக்கு சட்டமன்றத்தில்  மூன்று உறுப்பினர்கள் இருப்பதால் மாம்பழம் பறிபோகாது என்கிறது மருத்துவர் கட்சி.
 
மேலும் கடந்த ஜூலை 29, 2010 தேதியிட்ட  இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட ஆணையில் மாநில கட்சிக்கான விதிகளை புதுச்சேரி பாமக பெறாததால் அங்கு பாமக-விற்கான மாநில கட்சி என்ற உரிமையை ரத்து செய்ததாக கூறியது குறிப்பிடத்தக்கது. '2006  ல்  புதுவையில் ஆட்சி; 2011 ல் தமிழகத்தில் ஆட்சி' என்று முழங்கிய மருத்துவர், இன்று இரு மாநிலங்களிலும் கட்சியின் முகவரியை கூட காக்க முடியாமல் முனங்கிக்கொண்டிருக்கிறார். அதே வேளையில் மருத்துவருக்கு இன்னொரு வேதனை செய்தி என்னவெனில், எந்த விஜயகாந்தை பற்றி அவரை ஒரு பொருட்டாகவே கருதவில்லை என்று பகட்டாக கூறினாரோ அந்த விஜயகாந்தின் தே.மு.தி.க.வுக்கு அரசியல் அங்கீகாரம் கிடைக்கிறது.
 
சட்டசபை தேர்தலில் அ.தி. மு.க. கூட்டணியில் 41 தொகுதியில் போட்டியிட்டு 29 இடங்களில் வெற்றி பெற்றது. மொத்தம் 29 லட்சத்து 3 ஆயிரத்து 228 ஓட்டுகள் பெற்றது. இது 7.88 சதவீத ஓட்டுகள் ஆகும். இதுதவிர அ.தி.மு.க.வுக்கு அடுத்த பெரிய கட்சியாக உருவெடுத்து எதிர்க்கட்சி அந்தஸ்தை பிடித்து தி.மு.க.வை 3-வது இடத்துக்கு தள்ளியது. இதன் மூலம் தே.மு.தி.க. அரசியல் அங்கீகாரம் பெற்று நிலையான சின்னத்தையும் பெறுகிறது என்பதுதான் 'ஹைலைட்'. பாட்டாளி மக்கள் கட்சி, பாட்டாளிகளை மறந்ததால் பரிதாப மருத்துவர் கட்சியாக காட்சியளிக்கிறது. நல்ல மருந்தை [மத சார்பின்மை] தந்து மருத்துவர் தேற்றுவரா?
 
 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக