புதன், 1 ஆகஸ்ட், 2012

அமெரிக்காவிடமிருந்து புதிய அச்சுறுத்தல்...

அமெரிக்காவிடமிருந்து புதிய அச்சுறுத்தல்...

First Published : 02 Aug 2012 01:54:32 AM IST



ஹைபர்சானிக் பாமர்ஸ்' என்ற பெயரிலான அதி நவீன போர் விமானத்தைத் தயாரிக்கும் பணியில் இறுதி கட்டத்தை எட்டிவிட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் இருந்து உலகின் எந்த மூலையில் உள்ள பகுதிக்கு வேண்டுமானாலும் ஒரு மணி நேரத்துக்குள் சென்று குண்டுகளை வீசி அழிக்கும் ஆற்றலுடையதாம் இந்த விமானம்.

"எக்ஸ் - பிளேன்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த "ஹைபர் சானிக் பாமர்ஸ்', 2016-ம் ஆண்டில் மேம்படுத்தப்பட்டு அறிமுகப்படுத்தப்படும்போது ஒலியின் வேகத்தைவிட 20 மடங்கு வேகமாக பாய்ந்து செல்லும். 30 ஆண்டுகள் பாடுபட்டு இதனை உருவாக்கியிருப்பதாக அமெரிக்க பாதுகாப்பு துறையின் நவீன ஆயுதத் தயாரிப்பு ஆய்வுப் பிரிவு பெருமையுடன் கூறியுள்ளது.

இந்த உலகின் சட்டாம்பிள்ளையாகத் தன்னைக் கருதிச் செயல்படும் அமெரிக்கா, தங்களை எதிர்க்கும் அல்லது தங்களுக்கு ஒத்துவராத நாடுகளை என்ன செய்யும் என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் உள்ளன.

வியட்நாம், இராக், ஆப்கானிஸ்தான், லிபியா என அமெரிக்காவால் போர் தொடுக்கப்பட்ட நாடுகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. இவற்றில் ஒரு சிலவற்றை "பயங்கரவாதத்துக்கு எதிரான போர்' என்று அது நியாயப்படுத்தினாலும் உண்மையை மறைத்துவிட முடியாது. தங்களுக்கென்று ஓர் உள்நோக்கத்தையும், பெரிய ஆதாயத்தையும் மனதில் வைத்துத்தான் பல போர்களை நடத்தியும், தூண்டியும் வந்துள்ளது அமெரிக்கா.

அமெரிக்கா நேரடியாகக் களமிறங்காத அல்லது அமெரிக்கப் பின்னணி இல்லாத போர்கள் மிகக் குறைவு. பல நாடுகளில் உள்நாட்டுப் போர்களுக்கும், கிளர்ச்சிகளுக்கும்கூட அமெரிக்காதான் தூண்டுதலாக இருந்தது என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

அமெரிக்கா வைத்துள்ளதுபோன்ற ஆயுதங்களை வேறு எந்த ஒரு நாடு தயாரித்து இருந்தாலும் அமெரிக்காவின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்று சிந்திக்க வேண்டும்.

பொருளாதாரத் தடையில் தொடங்கி, இறுதியில் "நேட்டோ' நாடுகளை துணைக்கு அழைத்துக் கொண்டு அந்த நாட்டின் மீது போர் தொடுத்திருக்கும்.

இராக்கில் சதாம் உசைன் அணு ஆயுதங்களையும், ரசாயன ஆயுதங்களையும் தயாரிக்கிறார் என்று குற்றம்சாட்டித்தான் அந்நாட்டின் மீது போர் தொடுத்தது அமெரிக்கா. ஆனால் இறுதியில் அங்கு அமெரிக்கா கூறியது போன்ற ஆயுதங்கள் எதுவுமே இல்லை.

அணு ஆயுதங்கள் வைத்திருக்கக் கூடாது என்று பிற நாடுகளை வலியுறுத்தும் அமெரிக்காதான், உலகில் மிக அதிகமாக 5,113 அணு ஆயுதங்களை தயாரித்து வைத்திருக்கிறது. இது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது மட்டுமே.

அணு ஆயுதத்தை முதலில் தயாரித்ததும், போரில் அதைப் பயன்படுத்தி லட்சக்கணக்கான உயிர்களைப் பலி வாங்கியதும் அமெரிக்காதான்.

அணு ஆயுதங்கள் தவிர, விவரிக்க முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும் ரசாயன உயிரி ஆயுதங்களையும் வைத்துள்ளது. முதல் உலகப் போரின்போதே ரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியுள்ளது.

மதத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும் தங்களுக்கென்று ஒரு கொள்கையை வைத்துக் கொண்டு, மனித வேட்டையாடி வரும் பயங்கரவாதக் குழுக்கள் அனைத்துமே எந்தச் சூழ்நிலையிலும் ஏற்றுக் கொள்ளவும், சகித்துக் கொள்ளவும் முடியாதவைதான்.

அனைத்து பயங்கரவாதக் குழுக்களுமே உலகில் இருந்து அப்புறப்படுத்த வேண்டிய நச்சுக் கழிவுகள்தான். அதே நேரத்தில் "அங்கீகரிக்கப்பட்ட பயங்கரவாதி'யாக ஒரு நாடு வலம் வருவதை வேடிக்கைப் பார்க்கத்தான் முடிகிறது.

இதுநாள் வரை பொருளாதார பலம், ஆயுத பலம் ஆகிய இரு கரங்களால் பிற நாடுகளை ஆட்டுவித்து வந்தது அமெரிக்கா. இப்போது அமெரிக்கப் பொருளாதாரம் சரிவுப் பாதையில் பயணிக்கத் தொடங்கிவிட்டது.

அமெரிக்காவை பின்னுக்குத்தள்ளும் பொருளாதார சக்திகளாக சில நாடுகள் தலைதூக்கத் தொடங்கிவிட்டன. எனவே ஒரு கை செயல் இழந்துவிட்டதால் மற்றொரு கையை இரு கைகளுக்கு இணையாக வலுப்படுத்தும் முயற்சியில்தான் பேரழிவு ஆயுதங்களை அதிகப்படுத்தி வருகிறது.

அமெரிக்காவுக்கு வேண்டுமானால் இந்த விமானத் தயாரிப்பு சாதனையாகவும் பெருமிதமாகவும் இருக்கலாம். அமைதியை விரும்பும் உலக சமுதாயத்துக்கு இது புதியதோர் அச்சுறுத்தல் என்பதில் சந்தேகமே இல்லை.
நன்றி; தினமணி. 2 .8.12

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக