சனி, 5 மார்ச், 2011

அரபுலகில் கிளர்ச்சி; அந்நிய சக்திகளின் சூழ்ச்சியா..?

ப்பிரிக்க கண்டத்தில் உள்ள தூனீஷியாவில் ஆரம்பித்த  ஆட்சியாளர்களுக்கு எதிரான கிளர்ச்சி அங்கே வெற்றிவாகை சூடி, எகிப்தையும் வெற்றிகொண்டு அதை தொடர்ந்து மத்திய கிழக்கு நாடான ஈரான் வட ஆப்ரிக்க நாடான லிபியா, அரபு தீபகற்ப நாடான ஏமன், வளைகுடா நாடான பக்ரைன் ஆகியவற்றில் அரசுகளுக்கு எதிரான மக்கள் கிளர்ச்சி தீவிரம் அடைந்துள்ளது.

பொதுவாக மக்கள், ஆட்சியாளர்களிடம் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டம் நடத்துவார்கள். ஆனால் ஆட்சியாளரையே மாற்றவேண்டும் என்ற போராட்டம் நடத்தப்பட  காரணம் இரண்டுதான் இருக்கமுடியும். ஒன்று அந்த ஆட்சியாளர் மக்களின் ஏகோபித்த வெறுப்பை சம்பாதித்தவராக  இருக்கவேண்டும். அல்லது அந்த ஆட்சியாளருக்கு இருக்கும் சொற்பமான எதிர்ப்பை  பயன்படுத்தி, அந்நிய சக்திகளின் தூண்டுதலில் நடக்கவேண்டும்.

அரபு நாடுகளை பொறுத்தவரையில் மக்களின் அடிப்படை வசதிகள் மற்றும் பாதுகாப்பு விஷயங்கள் சிற்சில குறைபாடுகள் இருந்தாலும், ஏனைய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சிறப்பாகவே இருப்பதை எவரும் மறுக்க முடியாது. வேலைவாய்ய்பு குறைபாடுகள் மற்றும் ஆட்சியாளர்களின் ஆடம்பர வாழ்க்கை எல்லா நாட்டிலும் இருப்பதைப் போல் இங்கேயும் இருப்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். இதற்காக மட்டும் தான்  இவ்வளவு பெரிய கிளர்ச்சி என்பதை ஏற்கமுடியாத நிலையில் நடுநிலையாளர்கள் உள்ளனர். ஆட்சியாளர்களுக்கு எதிராக இயல்பாக ஏற்பட்ட சிறிய அளவிலான எதிர்ப்புணர்வு தூண்டப்பட்டதோ என்ற சந்தேகமும் ஏற்படாமலில்லை.

நடுநிலை சிந்தனையாளர்களின் இந்த சந்தேகப் பொறிக்கு ஒபாமாவின் கருத்து வலுவூட்டுவதாக உள்ளது. ஈரானின் அரசுக்கெதிரான போராட்டத்தை அமெரிக்கா பாராட்டியுள்ளது. ஈரான் போராட்டம் குறித்துப் பேசிய அமெரிக்க அதிபர் ஒபாமா,"மக்கள் தங்கள் குறைகளை எடுத்துச் சொல்வதற்கு உரிமையுடையவர்கள். எகிப்தில் அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்திய போது அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை. ஆனால் ஈரானில் மக்கள் தங்கள் குறைகளைச் சொன்னால் அரசு அவர்களைச் சுடுகிறது. எகிப்து மற்றும் ஈரானைப் பாருங்கள் என்பதுதான் மத்திய கிழக்கில் உள்ள எங்கள் நட்பு நாடுகளுக்கு நாங்கள் தரும் செய்தி. ஈரான் மக்கள் தங்கள் விடுதலைக்காகத் தொடர்ந்து துணிவுடன் போராடுவர் என நான் நம்புகிறேன்' என்று பேசியதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

ஒபாமாவின் நெருங்கிய நண்பரான ஹோஸ்னி முபாரக்கை கைவிட்டதும், ஈரான் அரசுக்கெதிரான மக்களின் கிளர்ச்சியை தூண்டும் வகையில் அமைந்த ஒபாமாவின்  கருத்தும், லிபியாவை நோக்கிய காய் நகர்த்தலும்  சற்றே நெருடலை ஏற்படுத்துவதை மக்கள் அவதானிக்கிறார்கள். மேலும் எகிப்தில் தொடங்கிய கிளர்ச்சி தொடர்ந்து முஸ்லிம் நாடுகளை மட்டும் மையம் கொள்வதும் கவனிக்கத் தக்கது. முஸ்லிம் நாடுகளில் நடைபெறும் கிளர்ச்சிகள் உண்மையில் மக்களின் உணர்வுகளின் எழுச்சியா? அல்லது முஸ்லிம் உலகின் ஸ்திரத்தனமையைக் குலைக்க அந்நிய சக்திகளின் சதியா? என்பதற்கு காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

இதுபோக, ''ஆட்சி அமைக்கிற முறையை இஸ்லாம் பார்க்காது; ஆனால் ஆட்சி இப்படித்தான்  நடக்கணும் என்று இஸ்லாம் சொல்கிறது. அதுனால மன்னராட்சியா? மக்களாட்சியா? என்பதல்ல முக்கியம். அது நல்லாட்சியா இருக்கணும்கிறதுதான் இஸ்லாமிய நிலைப்பாடு' என்று பேசியவர்கள் இன்று, முஸ்லிம் நாடுகளில் மன்னராட்சி ஒழிந்து இஸ்லாமிய ஆட்சி மலருமா.? என்று எழுத்தோவியம் படைக்கிறார்கள். ஏன் மன்னராட்சி ஒழிந்தால்தான் இஸ்லாமிய ஆட்சி மலருமா? மன்னராட்சியில் இஸ்லாமிய ஆட்சிமுறையை கொண்டுவர முடியாதா? நபியவர்கள் நடத்திய மன்னராட்சியில் இஸ்லாம் இல்லையா? அத்தகைய மன்னராட்சிக்கு உட்பட்ட இஸ்லாமிய ஆட்சி மலருமா என்று கேட்க வேண்டியது தானே! மேலும் மன்னராட்சி இல்லாத முஸ்லிம் நாடுகளில் எத்தனை நாடுகளில்  இஸ்லாமிய ஆட்சி நடைமுறையில் உள்ளது..? இன்னும் சொல்லப்போனால் மன்னராட்சியில்தான் இஸ்லாமிய ஆட்சியை அமைப்பதற்கான  அதிகமான சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதை மறந்துவிடக்கூடாது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக