புதன், 4 ஜூலை, 2012

பாலஸ்தீன தலைவர் யாசர் அரபாத்தை விஷம் வைத்துக் கொன்றது இஸ்ரேல்!

தோஹா: பாலஸ்தீன தலைவர் யாசர் அரபாத் விஷம் வைத்துக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

பாலஸ்தீன தலைவர் யாசர் அரபாத் உடல்நலக் குறைவுக்காக பல வாரங்கள் பாரீஸில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொண்டும் பலனில்லாமல் கடந்த 2004ம் நவம்பர் 11ம் தேதி தனது 75வது வயதில் மரணம் அடைந்தார்.

அப்போது அவர் உடல்நலக் குறைவால் தான் இறந்தார் என்று கருதப்பட்டது. இந்நிலையில் யாசர் அராபத்தின் மனைவி சுஹாவிடம் கொடுக்கப்பட்டிருந்த அவரது உயிரியல் மாதிரிகளை வைத்து ஆய்வு செய்தனர்.

சுவிட்சர்லாந்தில் நடந்த இந்த ஆய்வில் அவருக்கு பொலோனியம் என்ற கதிர்வீச்சு கொண்ட விஷம் கொடுத்து கொல்லப்பட்டது தெரிய வந்துள்ளது. இந்த தகவலை அல் ஜெசீரா தெரிவித்துள்ளது.

இது குறித்து லாசேன் பல்கலைக்கழகத்தின் கதிர்வீச்சு இயற்பியல் துறை தலைவர் பிரான்காய்ஸ் போசட் கூறுகையில்,

யாசர் அரபாத்தின் உயிரியல் மாதிரிகளை ஆய்வு செய்ததில் அதில் குறிப்பிடத்தக்க அளவு பொலோனியம் இருந்தது என்றார்.

யாசர் அரபாத் இறந்தபோது அவரை இஸ்ரேல் விஷம் வைத்துக் கொன்றுவிட்டதாக பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் அவர் விஷம் வைத்துக் கொல்லப்படவில்லை என்று 2005ம் ஆண்டு விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

பொலோனியம் என்பது கதிரியக்கத் தனிமம் ஆகும். ஒரு தூசு அளவுக்கு உடலில் இது இருந்தாலே கிட்னி, கல்லீரல் பாதிக்கப்பட்டு சில வாரங்களில் உயிர் பிரிந்துவிடும்.

இந்த கதிரியக்கத் தனிமத்தை சந்தையில் வாங்க முடியாது. அணு உலைகளில் தான் பிரித்தெடுக்க முடியும். இதனால், இந்த பொலோனியத்தை இஸ்ரேல் தான் அராபத்தின் உணவில் கலந்திருக்க வேண்டும் என்று அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.

source;

http://tamil.oneindia.in/news/2012/07/04/world-yasser-arafat-poisoned-polonium-report-157003.html

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக