ஞாயிறு, 29 ஜூலை, 2012

பெட்ரோலுக்கு பதில் தண்ணீரில் ஓடும் கார்: பாகிஸ்தான் பொறியாளர் சாதனை



இஸ்லாமாபாத், ஜூலை 28- உலகம் முழுவதும் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வால் அதன் விலையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. 

எனவே பெட்ரோலுக்கு பதில் வாகனங்கள் தண்ணீரில் ஓடினால் எப்படி இருக்கும் என்று அனைவரும் விளையாட்டாக சொல்வது உண்டு. அதை உண்மையாக்கும் வகையில் தண்ணீரில் கார் ஓட்டி சாதனை படைக்கப்பட்டுள்ளது.   

அனைவரின் கனவையும் நனவாக்கி அபார சாதனை படைத்தவர் பெயர் வாக்கர் அகமது. பாகிஸ்தானை சேர்ந்த பொறியாளர். பொதுவாக வாகனங்களை பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் மூலம் இயக்க முடியும். 

ஆனால், அவற்றை தண்ணீர் மூலம் இயங்க வைக்க வாக்கர் அகமது தீவிர முயற்சி மேற்கொண்டார். அதன்படி புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கார் ஒன்றை தயாரித்தார். 

அதை பாகிஸ்தான் அமைச்சர்கள் மற்றும் எம்.பி.க்கள் முன்னிலையில் வெற்றிகரமாக ஓட்டி காட்டி அனைவரின் பாராட்டையும் பெற்றார்.   

இவர் வடிவமைத்த அந்த கார் ஹைட்ரஜன் வாயு மூலம் இயங்க கூடியது. அதற்கு தகுந்தபடி கார் என்ஜினை மாற்றி அமைத்துள்ளார். அதற்குள் ஊற்றப்படும் தண்ணீர் கொதித்து அதில் இருந்து வெளியாகும் ஹைட்ரஜன் வாயு மூலம் கார் இயங்குகிறது. 

ஒரு லிட்டர் தண்ணீர் மூலம் 1000 சி.சி. திறன் கொண்ட கார் 40 கி.மீட்டர் தூரம் ஓடுகிறது. அதே நேரத்தில் மோட்டார் சைக்கிளை 150 கி.மீட்டர் தூரம் இயக்க முடியும் என பொறியாளர் வாக்கர் அகமது தெரிவித்துள்ளார்.   

வாக்கர் அகமதுவின் இந்த கண்டுபிடிப்பு பாகிஸ்தானின் சுதந்திரதின விழா பரிசு என மத விவகாரங்கள் துறை அமைச்சர் சையத்குர்ஷித் அகமதுஷா தெரிவித்துள்ளார். 

அவருக்கு தங்களது அரசு முழு ஆதரவும், ஒத்துழைப்பும் அளிக்கும் என உறுதி கூறினார். மேலும் அவருக்கு பாராட்டும், வாழ்த்தும் தெரிவிக்கப்பட்டது


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக