எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்படவர்களை சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கக் கூடாது என்றும் அவர்களோடு சேர்ந்து உணவருந்துவதாலோ, தொடுவதாலோ, அவர்கள் பயன்படுத்திய பாத்திரங்களை பயன்படுத்துவதாலோ மற்றவருக்கு எயிட்ஸ் பரவாது என்றெல்லாம் அரசின் சார்பாக, தன்னார்வ நிறுவனங்கள் சார்பாக விழிப்புணர்வு பிரச்சாரங்கள் செய்யப்பட்டு மக்களுக்கு எயிட்ஸ் பற்றிய விழிப்புணர்வு ஊட்டி வரும் நிலையில், எயிட்ஸ் பாதிக்கப்பட்ட ஒருவரை பணி நீக்கம் செய்து மகாராஷ்டிரா அரசு தனது மனிதாபிமானமின்மையைக் காட்டியுள்ளது.
''எய்ட்ஸ் நோய் பாதித்ததால், தன்னால் பயணிகள் பேருந்தை இயக்க முடியாது, பேருந்து இயக்குவதைத் தவிர்த்து போக்குவரத்துத் துறையில் வேறு பணி அளிக்குமாறு மகாராஷ்டிர அரசு பேருந்து ஓட்டுநர் ஒருவர் மனு அளித்தார் என்றும், மனுவைப் பெற்றுக் கொண்ட மகாராஷ்டிர அரசு, எய்ட்ஸ் பாதித்த காரணத்தால் அவரை பணியில் இருந்தே நீக்கியுள்ளது என்றும் பத்திரிக்கைச் செய்தி ஒன்று கூறுகின்றது.
சம்மந்தப்பட்ட நபர் தானாக முன் வந்து தனக்குள்ள நோயை குறிப்பிட்டு வேறு பணி மாற்றம் வேண்டியுள்ள நிலையில், அவரை பணியில் இருந்தே நீக்கியது எவ்வாறு சரியாகும்? ஒருவருக்கு எய்ட்ஸ் நோய் இருக்கிறதா என்பதை வெளிப்படையாக அவ்வளவு எளிதில் கண்டுகொள்ள இயலாது. அந்த வகையில் அந்த மனிதர் நினைத்திருந்தால் தனது நோயை மறைத்து பணியில் தொடர்ந்திருக்க முடியும். ஆனாலும் அவர் உண்மையை மறைக்காமல் வெளிப்படுத்தியமைக்கு மகாராஷ்டிரா அரசு தந்த இந்த பரிசு மனிதநேயமுள்ள எவராலும் ஏற்றுக் கொள்ளமுடியாத ஒன்றாகும். எனவே அவரது வேண்டுகோளின் அடிப்படையில் அவருக்கு ஏற்றதொரு பணியினை வழங்கி தனது மனிதாபிமானத்தை மகாராஷ்டிரா அரசு தக்கவைக்க முன் வருமா?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக